திருப்புகழ் கதைகள்: முல்லைக்குத் தேர் ஈந்த பாரிவள்ளல்!

Published:

thiruppugazh stories - 2026

திருப்புகழ்க் கதைகள் பகுதி 249
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

பாரியான கொடை – பழநி
முல்லைக்குத் தேர் ஈந்த பாரிவள்ளல்

வேள்பாரி பறம்பு மலையை தலைமை இடமாய் கொண்டு ஆட்சி செய்த குறுநில மன்னர் ஆவார். கடைச்சங்கக் காலத்தைச் சார்ந்தவர். வேளிர் குலத்தின் எவ்வி குடியில் பிறந்ததால் வேள்பாரி என அழைக்கப்பட்டார். பாரி பறம்பு மலையையும் அதனைச் சூழ்ந்த பகுதிகளையும் ஆண்டவர். பறம்புநாடு முந்நூறு ஊர்களைக் கொண்டதாகும். பறம்புமலை, பிறம்பு மலை என்றாகி இப்பொழுது ‘பிரான்மலை’ என்று அழைக்கப்படுகிறது.

சங்ககாலத்தில் பாண்டிய அரசின் எல்லைப் பகுதியாகச் சுட்டப் பெற்றது பறம்புமலை ஆகும். பக்தி இலக்கியக் காலத்தில்.இம்மலை ‘கொடுங்குன்றம்’ என்று வழங்கப்பட்டது.. பிரான்மலை சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், காரைக்குடி திருப்பத்தூர் வட்டத்தில் சிவகங்கை ஒன்றியத்தில் கிருங்காக்கோட்டை என்னும் ஊரின் அருகில் உள்ளது. பாரியின் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 300 கிராமங்களே இருந்தன. அப்படி இருந்த போதிலும் அவர் மூவேந்தர்களை விடப் பெரும் புகழ் பெறக்காரணம் அவரது கொடைத்தன்மையே. கேட்போருக்கு இல்லை எனாது அளிப்பவர்.

இவர் கடையெழு வள்ளல்களில் ஒருவராகச் சங்க இலக்கியத்தில் போற்றப்படுபவர். புலவர் கபிலர் பாரியின் நண்பர். திருச்சியிலிருந்து மதுரை செல்லும் வழியில் கொட்டாம்பட்டியிலிருந்து விலகிச் செல்லும் சாலையில் கிழக்கு நோக்கிச் சென்றால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது பிரான்மலை. பாண்டியநாட்டில் உள்ளது திருவாதவூர். அவ்வூரில் பிறந்தவர் கபிலர் எனும் புலவர்; இவர் சங்கத்தமிழ் இலக்கியப்பரப்பில் மிக அதிகமான பாடல்களைப் பாடியவர் என்ற பெருமைக்குரியவர். இவர் கலையழகுமிக்க கவிதைகளைப் பாடியவர்; ‘பொய்யாநாவிற்கபிலர்’ என்று புகழப்படுபவர். இவர் பாரியின் மிகநெருங்கிய நண்பராவார். பாரியைப் பற்றி இறவாப்புகழுடைய பாடல்களைப்பாடியவர் கபிலர்.

மூவேந்தர்களும் பொறாமை கொள்ளும் அளவிற்கு அரசர் வேள்பாரியின் புகழ் தென்னகம் முழுவதும் பரவி இருந்தது. அதானல் பொறாமை கொண்டு பாரி மூவேந்தரால் வஞ்சித்துக் கொல்லப்பட்டார். வேள்பாரிக்கு இருமகளிர் உண்டு. அங்கவை சங்கவை என்பது அவர்களின் பெயர். ஆதரவின்றிருந்த பாரியின் மகள்களுக்குத் திருமணம் செய்து வைக்க எண்ணி ஔவையார் முயன்றபோது அதனைத் தடுக்க மூவேந்தர்கள் முயன்றனர். ஆனால் ஔவையார் அவர்களைத் தடுத்து நிறுத்தி கரபுரநாதர் கோவிலில் மணம் செய்து வைத்தார். அந்தக் கோவில் தற்போது சேலத்தில் உத்தமசோழபுரம் (சோழன் இருந்த இடம்) என்ற பகுதியில் உள்ளது. மேலும் அருகில் வீரபாண்டி (பாண்டியன் இருந்த இடம்), சேலம் (சேரநிலம்-சேரன் இருந்த இடம்) உள்ளது. பாரியை ஒளவைப் பெருமாட்டியும் சிறப்பித்துப் பாடியுள்ளார்.

ALSO READ:  சாவர்க்கரும் ஜனநாயகமும்

வள்ளல்கள் எல்லாரையும் விட உயர்ந்தவனாகப் பாரியைத் தமிழ்ச்சான்றோர்கள் போற்றுவர். அதற்குக் காரணம், அப்பெருமன்னன் படர்வதற்குக் கொழுகொம்பின்றித் தவித்த முல்லைக்கொடிக்குத் தான் ஏறி வந்த தேரினையே ஈந்த புகழ்ச்செயலே காரணம் என்பர். ஒரு முல்லைக் கொடிக்காகத் தான் ஊர்ந்து வந்த தேரை ஈந்த சிறப்பால் பாரி வள்ளல்களிலேயே தலைசிறந்தவராகப் போற்றப்படுகின்றார். இதனைக் கபிலர் சிறப்பித்துப் பாடுகின்றார். ஆளுடைய நம்பி என்று புகழ்பெற்ற சுந்தரர் -‘திருத்தொண்டத்தொகை’ என்ற புகழ்பெற்ற பதிகத்தைப் பாடியவர் – பாரியையே கொடைக்கு எல்லையாகச் சுட்டுவர். பாரியைப் பற்றிய பாடல்கள் சங்கத்தொகை நூலுள் பல உள்ளன. எடுத்துக்காட்டாக

நறு வீ உறைக்கும் நாக நெடு வழிச்
சிறு வீ முல்லைக்குப் பெருந் தேர் நல்கிய,
பிறங்கு வெள் அருவி வீழும் சாரல்90
பறம்பின் கோமான், பாரியும்; கறங்கு மணி
(சிறுபாணாற்றுப்படை 91)

பாரி சிறு வீ முல்லைக்கு பெருந்தேர் வழங்கியது பற்றிய குறிப்பு இப்பாடலில் காணப்படுகிறது. நற்றிணையில் தலைவில் வீட்டுக்காவலில் உள்ளாள்; அந்த வீட்டுக்காவல் பாரியின் குன்றம் போன்று காவல் மிக்கது என ஒரு பாடல் கூகிறது.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

உள்ளினும் பனிக்கும் ஒள்ளிழைக் குறுமகள்
பேரிசை உருமொடு மாரி முற்றிய
பல்குடைக் கள்ளின் வண்மகிழ்ப் பாரி
பலவுறு குன்றம் போலப்
பெருங்கவின் எய்திய அருங்காப் பினளே.
(நற்றிணை, 253)

பாரியின் குன்றம் போல அரிய காவலையுடையள் என உவமையைக் கவினுக்குமட்டுமின்றிக் காப்பிற்கும் நாம் கொள்ளல் வேண்டும். மேலும் கபிலரே வேறு பாடல்களில் கடந்தடு தானை மூவுருங்கூடி உடன்றனி ராயினும் பறம்பு கொளற்கரிதே (புறநானூறு 110) என்றும், அளிதோதானே பேரிருங் குன்றே வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே (புறநானூறு 111) என்றும் கூறுகிறார்.

பாரி பாரி என்றுபல ஏத்தி,
ஒருவர்ப் புகழ்வர், செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்:
மாரியும் உண்டு, ஈண்டு உலகுபுரப்பதுவே.
(புறநானூறு 107, கபிலர்)

செந்நாப் புலவர் எல்லோரும், ‘பாரி பாரி’ என்று அவனையே புகழ்கின்றார்களே? வழங்குவது பாரி ஒருவன் அல்லனே? உலகம் காப்பதற்கு இங்கு மாரியும் உள்ளது அன்றோ? – என்பது இப்பாடலின் பொருளாகும். இதே கருத்தை அருணகிரியார் இப்பாடலில் குறிப்பிட்டுள்ளார். கொண்டல் என்றால் மேகம்.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

Related articles

Recent articles

spot_img