
பகவத்கீதை பகுதி 6 :
மகாபாரதக் கதை
ஆன்மிகத்தில் மகாபாரதம் பெறும் இடம்
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
பகவத்கீதை மகாபாரதத்தில் இடம் பெறுகிறது. அதனை பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அர்ச்சுனனுக்குச் சொல்கிறார். எனவே பகவத்கீதை தோன்ற, அதன் பின்னணியை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். அதாவது மகாபாரதம் பற்றி அறிய வேண்டியது அவசியம். எனவே நான் மகாபாரதக்கதையைச் சொல்ல முதலில் முயற்சிக்கிறேன்.
மகாபாரதமும் இராமயணமும் நமக்கு இறைவனை அடையும் வழிகளைச் சொல்கின்றன. இறைவனை அடையும் வழிகள் என்ன என்பதை ஒரு ஸ்லோகம் சொல்கிறது.
“ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ: ஸ்மரணம் பாத சேவனம். அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் ஸக்ய ஆத்மநிவேதனம்”
என ஒன்பது வித பக்தியை பாகவதம் குறிப்பிடுகிறது.
- ஸ்ரவணம் – ஆண்டவனுடைய புகழைக் காதுகளால் கேட்டு இன்புறுவது.
- கீர்த்தனம் – பகவானுடைய புகழை எப்போதும் பாடிக் கொண்டிருத்தல்.
- ஸ்மரணம் – ஆண்டவன் நினைவாகவே இருத்தல்.
- பாதஸேவனம் – ஆண்டவனுடைய திருவடிகளை சேவித்தல்.
- அர்ச்சனம் – பூஜித்து வழிபடுதல்.
- வந்தனம் – ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்தல்.
- தாஸ்யம் – இறைவனின் கட்டளைப்படி நடத்தல்.
- ஸக்யம் – கடவுளையே நண்பராக பாவித்து அன்பு கொள்ளுதல்.
- ஆத்மநிவேதனம் – ஆண்டவரிடம் முழுமையாக ஒப்படைத்தல்.
இப்படி ஒன்பது விதமான பக்தி நிலைகள் இருந்தாலும் இதில் ஸ்ரவணம் எனும் கடவுளின் புகழினை கேட்கும் நிலையே பெரிதும் போற்றப்படுகிறது. எளிதான வழியும் இதுதான். எப்போதெல்லாம் ஆண்டவனின் திருநாமங்களை, பாடல்களை, கதைகளை கேட்க முடியுமோ அப்போதெல்லாம் கேட்டு விடவேண்டும். இதுவே நமக்கான முக்தியை அளிக்கக்கூடியது.
ஸ்ரீராமரோடு வைகுந்தம் செல்ல விருப்பமின்றி ஹனுமான் ஸ்ரவண பக்திக்காக சிரஞ்சீவியாக பூலோகத்திலே தங்கி விட்டார். எங்கெல்லாம் ராமநாமம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் ராமநாமம் சொல்பவரை ஆசிர்வதிக்க வந்து விடுகிறார். எனவே எளிதான ஸ்ரவண பக்தியை மேற்கொண்டு எல்லோருமே முக்தியை அடையலாம் என ஆன்றோர்கள் கூறியுள்ளார்கள். அதை நாமும் பின்பற்றலாமே.
ஸ்ரவணம் என்றால் கேட்டல். எதைக் கேட்க வேண்டும்?
ரிக், யஜுர், சாம, அதர்வணம் எனும் நான்கு வேதங்களைப் பற்றிக் கேட்கலாம். வேத விளக்கங்களான -ஸம்ஹிதை. பிராமாணம், ஆரண்யகம், உபநிடதம் ஆகியவை பற்றிக் கேட்கலாம். வேதாங்கங்களான சிக்ஷா, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜோதிடம், கல்பம் ஆகியவைகளைப் பற்றிக் கேட்கலாம். இதிஹாசங்களான இராமாயணம், மகாபாரதத்தைப் பற்றிக் கேட்கலாம். இதிஹாசம் – இதி+ஹ+அஸ – இது இப்படி நடந்தது. இதிலே இராமாயணம் வான்மீகி முனிவரால் எழுதப்பட்டது. அவர் இராமயணகாலத்தில் வாழ்ந்தவர். பாரதம் வியாச பகவானால் எழுதப்பட்டது. அவர் மகாபாரதகாலத்தில் வாழ்ந்தவர்.
மகாபாரதம் பல சிறப்பு அம்சங்களைக் கொண்டது. அவையாவன:
- சிற்றின்ப நுகர்வை தியாகம் செய்யும் – பீஷ்மன்
- தன் மனைவியை இன்னொருவர் மூலம் கருத்தரிக்கச் செய்யும் – பாண்டு
- கணவனுக்காக வாழ்நாள் முழுவதும் கண்ணைக் கட்டிக்கொண்டு வாழும் மனைவி – காந்தாரி
- ஐந்து கணவர்களோடு எந்தவிதச் சிக்கலும் இன்றி வாழும் பெண் – திரௌபதி.
- ஓராண்டிற்கு பேடியாக வாழும் ஒருவன் – அர்ச்சுனன்
- மிகப்பெரிய காடு அழிக்கப்பட்டது – காண்டவப் பிரஸ்தம்
- சூதாட்டத்தில் நாட்டைப் பணயம் வைத்த அரசன் – தருமன்
- போர்க்களத்தில் பிறக்கும் கீதை
- தாயே பிள்ளைகளைக் கொல்லும் அதிசயம் – கங்கை




