
கேரளாவில் இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்காக கடந்த மாதம் 16 ஆம் தேதி திறக்கப்பட்டது.
41 நாட்கள் கோவில் திறந்திருக்கும் நிலையில், கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு பல கட்டுபாடுகளை அம்மாநில அரசு விதித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாள்தோறும் 2 ஆயிரம் பக்தர்களை நேரடியாகவும், ஆன்லைன் மூலம் பதிவு செய்து வரும் பக்தர்களை 30 ஆயிரம் பேரையும் அனுமதிப்பதாக அறிவித்தது.
ஆனால், இந்த எண்ணிக்கை அதிகரிக்குமாறு கோரிக்கை எழுந்ததால், ஆன்லைன் மூலம் பதிவு செய்வோர் 40 ஆயிரம் பேரும், நேரடியாக செல்வோர் எண்ணிக்கையை 5 ஆயிரமாகவும் உயர்த்தியது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் அல்லது 72 மணி நேரத்துக்கு முன்பாக எடுக்கப்பட்ட ஆர்டி.பி.சி.ஆர் டெஸ்ட் முடிவுகளை வைத்திருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
குழந்தைகளுக்கு தடுப்பூசி இல்லை என்றாலும், அவர்களை அழைத்து வரும் பக்தர்கள் கவனமாக பார்த்துக்கொள்ளுமாறு கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது.
கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவ வேண்டும், முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு முதல் அன்னம் ஊட்டுவதற்கும் சபரிமலையில், தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நெய் அபிஷேகத்தையும் மீண்டும் தொடங்க கோயில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
மேலும், பாரம்பரியமாக சபரிமலை சன்னிதானம் செல்லக் கூடிய பம்பா – நீலிமலை – அப்பாச்சி மேடு – சரம் குத்தி பாதை வழியாக பக்தர்களை அனுமதிக்கவும், பம்பா, நிலக்கல் பகுதியில் பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர் விநியோகிக்கவும் முன்னேற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
சன்னிதானம் செல்ல நேரடி முன்பதிவிற்காக, நிலக்கல், எருமேலி உட்பட 10 இடங்களில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு, கேரள எல்லையான குமுளியில் ஸ்பாட் புக்கிங் மையம் அமைக்கப்பட்டுள்ளது.