உலகக் கோப்பை டி20 போட்டிகள் – பதினான்காம் நாள் – 29.10.2022
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இன்று உலகக் கோப்பை டி20 போட்டிகளில் நியூசிலாந்து இலங்கை அணிகளுக்கு இடையேயான ஆட்டம் நடைபெற்றது. நியூசிலாந்து அணி (167/7, பிலிப்ஸ் 104, மிட்சல் 22, ரஜிதா 2/23) இலங்கை அணியை (19.2 ஓவரில் 102 ஆல் அவுட், ராஜபக்ஷா 34, தசுன் ஷங்கா 35, போல்ட் 4/13, சாண்ட்னர் 2/21, சோதி 2/21) 65 ரன் கள் வித்தியாசத்தில் வென்றது.
நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை வீரர்கள் படாத பட்டனர். அபார வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு, கேன் வில்லியம்சன், டீவன் கான்வே, பின் ஆலன் என அனைத்து நட்சத்திர வீரர்களும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், தன்னந்தனியாக போராடிய கிளன் பிலிப்ஸ் 64 பந்துகளில் 4 சிக்ஸர் மற்றும் 10 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி 167 ரன்கள் எடுத்தது.
இதன்பின் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இலங்கை அணி, நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் கடுமையாகத் திணறியது. குறிப்பாக டிரண்ட் பவுல்ட்டின் வேகத்தை சமாளிக்க படாதபாடு பட்ட இலங்கை அணி 24 ரன்கள் எடுப்பதற்குள் 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.
பனுகா ராஜபக்சே 34 ரன்களும், தசுன் ஷனாகா 35 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்களில் ஒருவர் கூட ஒற்றை இலக்க ரன்னை தாண்டாததால் 19.2 ஓவரில் 102 ரன்கள் எடுத்த போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
நாளை குரூப் 2 பிரிவில் மூன்று ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. வங்கதேச அணி ஜிம்பாபே அணியை எதிர்த்து பிரிஸ்பேன் மைதானத்திலும், பெர்த் மைதானத்தில் நெதர்லாந்து பாகிஸ்தான் அணிகளும், இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளும் மோதவிருக்கின்றன.