
ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி; எட்டாம் நாள் 14.02.2026
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
இன்று (14.02.2026) மூன்று ஆட்டங்கள் நடந்தன. முதல் ஆட்டம் காலை 1100 மணிக்கு கொழும்புவில் அயர்லாந்து ஓமன் அணிகளுக்கிடையே நடந்தது. இரண்டாவது ஆட்டம் மதியம் 0300 மணிக்கு கொல்கொத்தா, ஈடங்கார்டன்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையே நடந்தது. மூன்றாவது ஆட்டம் அகமதாபாத்தில் இரவு 0700 மணிக்கு நியூசிலாந்து தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடந்தது.அயர்லாந்து சிறப்பான வெற்றி
பூவாதலையா வென்ற ஓமன் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் முதலில் மட்டையாட வந்த அயர்லாந்து அணியின் அணித்தலைவர் லோர்கன் டக்கர் (51 பந்துகளில் 94 ரன், 10 ஃபோர், 4 சிக்சர்) மிகச் சிறப்பாக ஆடினார். அவருக்குத் துணையாக கேரத் டிலானி (56 ரன்) மற்றும் ஜியார்ஜ் டக்கரல் (35 ரன்) நன்றாக ஆடினார்கள். இதனால் அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கட்டுகள் இழப்பிற்கு 235 ரன் எடுத்தது.
இதன் பின்னர் ஆடவந்த ஓமன் அணியில் தொடக்க வீரர் அமிர் கலீம் (50 ரன்), ஹமத் மிர்சா (46 ரன்), சூஃபியான் மெஹமூத் (10 ரன்) ஆகியோ மட்டுமே இரட்டை இலக்க ரன் அடித்தனர். பிறர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் 18 ஓவர்களுக்கு 139 ரன் எடுத்து அந்த அணி அனைத்து விக்கட்டுகளையும் இழந்து அவுட் ஆனது.
அயர்லாந்து அணியின் ஜோஷ் லிட்டில் 16 ரன்கள் கொடுத்து 3 விக்கட்டுகள் எடுத்தார். இதனால் அயர்லாந்து அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. லோர்கன் டக்கர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இங்கிலாந்து அணி ஸ்காட்லாந்து அணியை வென்றது
பூவாதலையா வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் முதலில் மட்டையாட வந்த ஸ்காட்லாந்து அணியின் மைக்கேல் ஜோன்ஸ் (33 ரன்), ரிக்கி பெர்ரிங்டன் (49 ரன்), டாம் ப்ரூஸ் (24 ரன்), ஆலிவெர் டேவிட்சன் (20 ரன்) நன்றாக ஆடினர். அதனால் 19.4 ஓவர்கள் முடிவில் அந்த அணி அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 152 ரன் எடுத்தது.
இரண்டாவதாக ஆடவந்த இங்கிலாந்து அணியில் ஜேக்கப் பெதல் (32 ரன்), டாம் பேண்டன் (63 ரன்), சாம் கரன் (28 ரன்), வில் ஜேக்ஸ் (16 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடியதால் அந்த அணி 18.2 ஓவர்களில் 5 விக்கட் இழப்பிற்கு 155 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக டாம் பேண்டன் அறிவிக்கப்பட்டார்.
தென் ஆப்பிரிக்க அணி எளிதில் நியூசிலாந்து அணியை வென்றது
பூவாதலையா வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் முதலில் மட்டையாட வந்த நியூசிலாந்து அணியின் முதல் நான்கு மட்டையாளர்கள் விரைவில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். மார்க் சாப்மன் (48 ரன்), டேரில் மிட்சல் (32 ரன்), ஜேம்ஸ் நீஷம் (ஆட்டமிழக்காமல் 23 ரன்) நன்றாக ஆடினர். அதனால் அந்த அணி 20 ஓவர்கல் முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு 175 ரன் எடுத்தது.
இரண்டாவதாக ஆடவந்த தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரரும் அணித் தலைவருமான எய்டன் மர்கரம் (86 ரன்) மிகச்சிறப்பாக ஆடினார். அவருடன் இணைந்து க்விண்டன் டி காக் (20 ரன்), ரியன் ரிக்கிள்டன் (21 ரன்), டிவால்ட் ப்ருவிஸ் (21 ரன்), டேவிட் மில்லர் (24 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடினர். அதனால் தென் ஆப்பிரிக்க அணி 17.1 ஓவர்களில் 3 விக்கட் இழப்பிற்கு 178 ரன் எடுத்து வெற்றி பெற்றது. நான்கு விக்கட்டுகள் எடுத்த தென் ஆப்பிரிக்க அணியின் மார்கோ யான்சென் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
நாளை (15.02.2026) முதல் ஆட்டம் காலை 0700 மணிக்கு மும்பை வான் கடெ மைதானத்தில் நேபாளம், மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு இடயே நடைபெறும்.
இரண்டாவது ஆட்டம் காலை 1100 மணிக்கு சென்னையில் நமீபியா, அமெரிக்க அணிகளுக்கு இடையே நடைபெறும்.
மூன்றாவது ஆட்டம் கொழும்புவில் இரவு 0700 மணிக்கு இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறும்.




