இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டி முடிந்தாலும், இதில் நிகழ்ந்த சில சுவாரஸ்யங்கள் இன்னமும் வலைத்தள உலகை உருட்டி எடுத்து வருகின்றன.
குறிப்பாக, ராகுல் அடித்த சதம், வெற்றி சதம் அடித்த மகிழ்ச்சியில் போட்ட ஆட்டம், இவை எல்லாம் விட, இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்வின் அபார பந்துவீச்சு எல்லாம் ஹாட் டாபிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது. இங்கிலாந்து கேப்டர் மோர்கன், எங்களை தவறான முடிவுகளை எடுக்க வைத்து ஏமாற்றினார் குல்தீப் யாதவ் என்பதுதான் ஆட்டத்தின் ஹைலைட்!
இங்கிலாந்தில் தன் முதல் போட்டியிலேயே 24 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள், அதிலும் ஒரே ஓவரில் 3 நட்சத்திர வீரர்களை திகைக்கவைக்கும் வகையில் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது பெற்றார் குல்தீப் யாதவ். ராகுலின் அதிரடி, குல்தீப்பின் சுழற்பந்து வீச்சால் சற்றே மட்டுப் பட்டாலும், குல்தீப்புக்கு ஷொட்டு வைத்திருக்கிறார் இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன்.
‘குல்தீப் யாதவ் எங்களை தவறாக நம்பவைத்து முற்றிலும் ஏமாற்றி விட்டார்’ என்று குதறி எடுத்திருக்கிறார். இங்கிலாந்து வீரர்கள் குல்தீப்பைக் கண்டு பதற்றமடைந்தனர். முன்வந்து அடித்து ஆட அவர்களால் முடியவில்லை.
குல்தீப் 4 பந்துகளில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி எங்களை தவறான முடிவுகளை எடுக்க வைத்து ஏமாற்றினார். நாங்கள் பந்தைத் தூக்கி அடித்து ஆட்டமிழந்ததைப் பற்றிக் கூறவில்லை, குல்தீப் மிகச் சிறப்பாக பந்து வீசி எங்களை ஏமாற்றி விட்டார். அதனால் நாங்கள் 30-40 ரன்கள் குறைவாக எடுத்தோம்.
ஆட்டத்தை நன்றாகத் தொடங்கினோம். குல்தீப் பந்துகளை இதை விடவும் சிறப்பாக ஆட முடியும். அடுத்த போட்டியில் எங்கள் திட்டங்கள் சரியானதாக அமையும். அதனை விடாமல் பிடித்துக் கொள்வோம்.
குல்தீப் பந்து வீச வரும்போது பட்லர் 35 பந்துகளை ஆடி களத்தில் பழக்கப் பட்டிருந்தார். சுழற் பந்து வீச்சை சிறப்பாக ஆடுபவர் பட்லர். அலெக்ஸ் ஹேல்ஸ் கூட வாய்ப்புகளைக் கொடுக்கவில்லை. இருப்பினும் எங்களை தவறான முடிவுகளை எடுக்கச் செய்தார் குல்தீப்.
இரு புறமும் பந்தை சுழற்றுகிறார். ஆனால் அதனை பேட்ஸ்மெனுக்குத் தெரியாமல் திறம்பட மறைக்கிறார். அது போல் பந்து வீச இங்கே யாருமில்லை. அதனால் குல்தீப்புக்கு எதிராக திட்டமிடல் அவசியம் என்று கருதுகிறேன் என்றார் மோர்கன்.