காரைக்காலில் வசித்து வருபவர் சவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கணவரை இழந்தவர். இவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மகளுக்குத் திருமணம் ஆகிவிட்டது. தற்பொழுது மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன் தினம் சந்தைக்கு சென்று காய்கறிகள் வாங்கிவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக பேருந்து நிலையம் அருகில் நின்றுள்ளார்.
அப்போது அங்கே காரில் வந்த நான்கு இளைஞர்கள் அவரை கடத்திச் சென்றுள்ளனர். ஊருக்கு வெளியே ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அவரைக் கடத்திச் சென்ற இளைஞர்கள் அவரிடம் இருந்த பணம் மற்றும் நகைகளைப் பறித்துக் கொண்டதோடு அல்லாமல், அவரை வன்புணர்வுக்கு ஈடுபடுத்தியுள்ளனர்.
இதனை வெளியே சொன்னால் என்ன செய்வோம் என்று தெரியாது என மிரட்டி அவரை அனுப்பியுள்ளனர். நடந்த சம்பவத்தைத் தன் மகனிடம் சொல்ல முடியாத அந்த தாய், பணமும் நகையும் திருடு போய்விட்டதாகக் கூறியுள்ளார். இது சம்மந்தமாக காவல்துறையில் புகார் கொடுத்திருக்கின்றனர், அவர்கள் சவிதாவிடம் நடத்திய விசாரணையில் அந்த பெண் நடந்த அனைத்தையும் கூறி அழுதுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் அந்தப் பெண் கடத்தப்பட்ட இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்ததில் இளைஞர்கள் வந்த கார் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அடுத்த கட்ட விசாரணையில் விஜய், ரமேஷ் ஆகிய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர், மேலும் தலைமறைவான இரண்டு இளைஞர்களைத் தேடி வருகின்றனர்.