வாணியம்பாடி அருகே 12 வயது சிறுமியை பீர் பாட்டில் முனையில் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பெற்றோரை இழந்த 12 வயது சிறுமி உறவினர்கள் பராமரிப்பில் வாழ்ந்து வருகிறார். இந்தச் சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை இரவு, வீட்டருகே இருக்கும் பாலாற்று பகுதியில் இயற்கை உபாதையை கழிக்கச் சென்றுள்ளார்.
அப்போது ஆற்றுப்பகுதியில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த கண்ணன், பார்த்திபன், சந்துரு ஆகியோர் சிறுமியை தடுத்து நிறுத்தி, பீர்பாட்டிலை உடைத்து சிறுமியின் கழுத்தில் வைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது.
பின்னர் அங்கிருந்து மறைவான இடத்திற்குச் சென்ற மூவரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டிய மூவரும், சிறுமியின் உடைகளை தூக்கி வீசிவிட்டு தப்பியுள்ளனர்.
ஆடையின்றி வெளிவரமுடியாமல் தவித்த சிறுமி, சுடுகாட்டுப்பகுதியில் கிடைத்த ஆடைகளை அணிந்துகொண்டு வீட்டுக்கு வந்து தகவல் கூறியுள்ளார். சிறுமியின் உறவினர் அளித்த புகாரின்பேரில், கண்ணன், பார்த்திபன், சந்துரு ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.