ஜெயங்கொண்டம் அருகே தேவாமங்கலம் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் செல்வம். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு அமுதன், அகிலேஸ்வரன் என்ற இரு மகன்கள் உள்ளனர். செல்வம் திருப்பூரில் பனியன் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் கொரோனாவால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவர் குடும்பத்துடன் அரியலூர் கண்டியங்கொல்லை கிராமத்தில் உள்ள தனது மாமனார் வீட்டில் வந்து தங்கியிருந்தார்.
இந்நிலையில் மதுப்பழக்கத்திற்கு அடிமையான அவர் மீண்டும் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்ட நிலையில் தினமும் குடித்து வந்துள்ளார். மேலும் சமீபத்திலும் அவர் அளவுக்கு மீறி மது குடித்துள்ளார்.
பின்னர் தனது தனது செல்போனை பழுது பார்ப்பதற்காக மூத்த மகனை அழைத்துக்கொண்டு கடைக்கு சென்றுள்ளார். அதனை தொடர்ந்து தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்ற அவர் அங்கும் குடித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து அவர் தனது மகனை பைக்கின் டேங்க் மீது அமர வைத்து மீண்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். மேலும் போதை தலைக்கேறிய நிலையில் அவர் வண்டியை தாறுமாறாக ஓட்டிச் சென்றுள்ளார். அப்பொழுது குழந்தை அமுதன் மோட்டார் சைக்கிளில் இருந்து வழுக்கி கீழே விழுந்துள்ளார்.
ஆனால் அதனை கூட கவனிக்காமல் செல்வம் வண்டியை ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் அவ்வழியாக வந்த இளைஞர்கள் 4 பேர் குழந்தை சாலையில் படுகாயங்களுடன் கிடப்பதை கண்டு, உடனடியாக குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இதுகுறித்து தெரியவந்த நிலையில் சிறுவனின் தாய் மகாலட்சுமி மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.
அதனை தொடர்ந்து போலீசார் குழந்தையின் தந்தை செல்வத்தை தேடியபோது, குழந்தை விழுந்து கிடந்த இடத்தில் அரை கிமீ தொலைவில் சாலையின் அருகே உள்ள முட்புதரில் மோட்டார் சைக்கிளுடன் செல்வம் சுயநினைவின்றி விழுந்து கிடந்துள்ளார். பின்னர் அவரும் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.