தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே முகநூலில் குழந்தைகளின் ஆபாச படங்களைப் பதிவேற்றம் செய்யப்பட்டது தொடர்பாக தந்தை – மகனை காவல் துறையினர் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.
குழந்தைகளின் ஆபாச படங்கள் அதிகளவில் வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படுவதால் பாலியல் வன்முறைகள் அதிகரிக்கின்றன. இதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. வலைதளங்களில் குழந்தைகளின் ஆபாச படங்களைப் பதிவேற்றம் செய்யப்பட்டது தொடர்பாக ஏற்கெனவே சிலர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், இதுதொடர்பாக வலைதளங்களைக் காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகில் பண்டாரவாடை கிராமத்தில் முகநூலில் குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் பதிவேற்றம் செய்வது காவல் துறையினருக்குத் தெரிய வந்தது.
இதுகுறித்து பாபநாசம் காவல் துணைக் கண்காணிப்பாளர் நந்தகோபால், பாபநாசம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் மேற்கொண்ட விசாரணையில் பண்டாரவாடையைச் சேர்ந்த ஒருவரின் செல்லிடப்பேசியிலிருந்து பதிவேற்றமாகியிருப்பதும், இவருடைய செல்லிடப்பேசியிலிருந்து இவரது 16 வயதுடைய மகன் பதிவேற்றம் செய்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, காவல் துறையினர் வழக்குப் பதிந்து தந்தை, மகனை புதன்கிழமை இரவு கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த மடிக்கணினி மற்றும் செல்லிடப்பேசி பறிமுதல் செய்யப்பட்டன.