
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக இதுவரை 35 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் மாணவியின் உறவினர்கள் கடந்த 5 நாள்களாக அமைதியான முறையில் போரட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை போராட்டத்திற்கு அதிக அளவிலான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டதைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் பள்ளி மீது கற்களை வீசி சூறையாடினர்.
போராட்டக்காரர்களை தடுக்க முயன்றபோது, காவலர்கள் மீதும் போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதில் டிஐஜி உள்பட 20 பேர் படுகாயமடைந்தனர். மேலும், பள்ளி வாகனங்களை அடித்து நொறுக்கி தீயிட்டு எடித்தனர். சாலையோரம் இருந்த காவல் துறை வாகனத்திற்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிவிரைவுப்படையினர் போராட்டக்காரர்களை 2 கி.மீ தூரத்துக்கு வெளியேற்றியதை அடுத்து தனியார் பள்ளி வளாகம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளியில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக இதுவரை 35 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக கள்ளக்குறிச்சி சின்னசேலம் மேம்பாலம் அருகில் வஜ்ரா வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சின்னசேலம் நயினார்பாளையத்தில் ஜூலை 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
