குதிரைமுழுங்கி குகாதேவன்!

Published:

thenkachi saminathan
thenkachi saminathan

ஒரு ஆள் டாக்டரைத் தேடி வந்தான். அவனை உட்கார வைத்து டாக்டர் விசாரித்தார்.

“சொல்லுப்பா.. உடம்புக்கு என்ன?”

“எனக்கு வயிறு வலிக்குது டாக்டர்”

“நான் மனநோய் மருத்துவர். வயிறு வலிக்கு நீ பார்க்க வேண்டிய டாக்டர் அடுத்த தெருவுல இருக்கார்.”

“அவர் அங்கயே இருக்கட்டும். எதனால எனக்கு வயிறு வலின்னு கேளுங்க டாக்டர்”

“சரி எதனால வலி?”

“நான் ஒரு குதிரையை முழுங்கிட்டேன்!”

“ஓ…அப்படீன்னா நீ இங்க வர வேண்டிய ஆள் தான். உள்ள ரூம்ல வந்து படு!”

உள்ளே அழைத்துச் சென்று, அவனுக்கு ஊசி போட்டு தூங்க வைத்தார். அவன் வழியிலேயே சென்று அவனை குணப்படுத்த எண்ணிய டாக்டர், உயிருள்ள ஒரு குதிரையை கொண்டு வந்து மருத்துவமனை வாசலில் கட்டச் செய்தார். தூங்கி எழுந்ததும், டாக்டர் அவனருகில் சென்று சொன்னார்.

“அப்பாடா! எல்லாம் நல்லபடியா முடிஞ்சது”

“நீங்க என்ன சொல்றீங்க டாக்டர்?”

“நீ நிஜமாவே ஒரு பெரிய குதிரையை முழுங்கியிருந்தே..அதை ஆபரேஷன் செய்து வெளியே எடுத்துட்டோம். நல்ல வேளை, உடனடியா நீ என்கிட்ட வந்ததால பிழைச்சிக்கிட்ட… அந்த குதிரையும் பிழைச்சிட்டுது”

“அப்படியா டாக்டர்…அந்தக் குதிரையை நான் பார்க்கலாமா?”

“வாசலில் கட்டிப் போட்டிருக்கேன். வந்து பார்”

அவன் மெல்ல எழுந்து, அடி மேல் அடி வைத்து வாசல் பக்கம் போனான். அங்கே குதிரையைப் பார்த்தான். எதுவும் பேசாமல் டாக்டர் பக்கம் திரும்பினான். டாக்டர் பெருமிதத்துடன் அவனைப் பார்த்தார்.

“பளார்!!”

எதிர்பாராமல் அவன் அறைந்ததால் நிலைகுலைந்த டாக்டர், “எதுக்குய்யா என்னை அடிச்சே” என ஆவேசமாக கேட்டார்.

“நீங்க ஒரு போலி டாக்டர். நான் முழுங்குனது வெள்ளை குதிரை. ஆனா நீங்க கறுப்பு குதிரையை காட்டி ஏமாத்தப் பாக்குறீங்க!

டாக்டர் மயங்கி விழுந்தார்.

  • தென்கச்சி கோ.சாமிநாதன் .

Related articles

Recent articles

spot_img