60 கோடி பேஸ்புக் பயனர்களின் பாஸ்வேர்டுகள் கசிந்துவிட்டதாக ஒரு தகவல் வெளியாகி, பேஸ்புக் பயனர்களுக்க் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
பேஸ்புக்கில் 60 கோடி பயனர்களின் பாஸ்வேர்டுகள், அந்நிறுவனத்தின் 20 ஆயிரம் ஊழியர்களால் மிகச் சுலபமாக அணுகும் வகையில் இருந்தது என்று இப்போது தகவல் வெளியாகியுள்ளது. இது பெரும்பாலான பேஸ்புக் பயனர்களுக்கும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
பேஸ்புக்கில் பலரும் ரகசிய சாட்டிங் என்று கருதி, தங்கள் அந்தரங்கமான விஷயங்களையும் பிறருடன் நம்பிக்கையின் பேரில் பகிர்ந்து கொண்டிருப்பார்கள். ஆனால் அதுவே பின்னாளில் அவர்களுக்கு பெரும் ஆபத்தை தோற்றுவிக்கும். அவ்வாறு மாட்டிக் கொண்டு விழி பிதுங்கியவர்கள் பலர்.
பேஸ்புக் வழியாகத்தான் இளைஞர்களிடையே பாலியல் ரீதியான குற்றச்செயல்கள், நிதி முறைகேடு குற்றச் செயல்கள் நடப்பதாகக் கூறுகின்றனர். இந்நிலையில், பாஸ்வர்ட் மிகவும் சுலபமாக அணுகக் கூடிய வகையில் இருந்தால், நிறுவனத்தில் பணிபுரியும் அல்லது மூன்றாம் நபர் மூலம் அது கசிந்து, தகவல்கள் படிக்கப் படுவதுடன், தனிப்பட்ட சாட்டிங் தகவல்களும் திருடப் பட்டு மோசமான பின்விளைவை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கின்றனர் வல்லுனர்கள்.
பேஸ்புக் நிறுவனத்தின் தகவல் பாதுகாப்பு குறைப்பாட்டை, பாதுகாப்பு வல்லுநர் பிரையன் கிரெப்ஸ் முதலில் சுட்டிக்காட்டினார். பேஸ்புக்கை பயன்படுத்தும் 60 கோடி பயனர்களின் லாகின் பாஸ்வேர்ட்கள் 2012ஆம் ஆண்டிலிருந்து வெறும் சாதாரண எழுத்து வடிவில் சேகரிக்கப்பட்டு வெளியாகியிருக்கலாம் என பிரையன் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஃபேஸ்புக் நிறுவனம், தங்கள் நிறுவனத்திற்குள்ளான நெட்வொர்க்கில் பாஸ்வோர்ட்கள் குறித்த கோளாறை சரி செய்துவிட்டதாக தெரிவித்துள்ளது.
ஆயினும் நிறுவனத்துக்கு வெளியிலான நெட்வொர்க் இன்னமும் பாதுகாப்பற்ற பொதுவெளியிலேயே உள்ளது என்பது அச்சமூட்டும் திகில் தகவல்தான்!