திருச்சி: மணல் திருட்டில் ஈடுபட்ட வட்டாட்சியர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி கொள்ளிடம் ஆற்றில் அனுமதியின்றி மணல் திருடிய லாரியையும், மணல் திருட்டிற்கு உதவிய மண்ணச்சநல்லூர் வருவாய் வட்டாட்சியர் ரேணுகாதேவி மற்றும் அவரது ஜீப் ஆகியவற்றை திருவாசி மக்கள் 3 மணி நேரம் சிறை பிடித்து வைத்தனர்..
திருச்சி மாவட்டம், மண்ணச்ச நல்லூர் அருகே திருவாசி கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளிய லாரியையும், மணல் திருடு பவர்களுக்கு உடைந்தையாக இருந்த மண்ணச்சநல்லூர் வருவாய்வட்டாட்சியர் ரேணுகாதேவி மற்றும் அவரது ஜீப்பையும் அப்பகுதி கிராம மக்கள் 3 மணி நேரமாக சிறைபிடித்து வைத்தனர். வட்டாட்சியர் மற்றும் லாரியையும் மண்ணச்சநல்லூர் போலீஸார் மீட்டனர்.
மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி கொள்ளிடம் ஆற்றில் தினசரி இரவு லாரிகளில் மணல் திருடுவதாக அப்பகுதி மக்கள் மண்ணச்ச நல்லூர் வருவாய் வட்டாட்சியருக்கு தினசரி தகவல் கொடுத்து வந்தனர்.
ஆனால் சம்பவ இடத்திற்கு மண்ணச்ச நல்லூர் வருவாய் வட்டாட்சியர் ரேணுகாதேவி வந்தாலும் மணல் திருட்டு தடுக்கப்படவில்லை. இந்நிலையில் தான் திருவாசி கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் வியாழக்கிழமை இரவு மணல் திருட்டு நடந்து கொண்டிருந்தது.
சம்பவ இடத்தில் அரசு ஜீப்பில் அமர்திருந்த வட்டாட்சியரிடம் அப்பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் திவாகர் மணல் திருடிக் கொண்டு 3 லாரிகள், 1 பொக்லின் ஆகியவை தப்பிச் செல்கிறதென கூறியுள்ளார்.
உங்கள் வேலையைப் பாருங்கள் எனக்கு தெரியும். மீறி என்னை தொந்தரவு செய்தால் அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்ததாக உங்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பேன் என மிரட்டியுள்ளார் வட்டாட்சியர்.
அதன் பிறகு கிராம மக்கள் 40 திற்கும் அதிகமானோர் சம்பவ இடத்திற்கு வந்தபோது ஆற்றிலிருந்து மணல் ஏற்றி வந்த லாரியையும், வட்டாட்சியர் ரேணுகாதேவி மற்றும் அவரது ஜீப்பையும் பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
அப்போது அங்கு வந்த லாரி உரிமையாளர் மண்ணச்சநல்லூர் ச.அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாலையா மகன் நந்தகுமார், பொதுமக்கள் மற்றும் போலீஸார் முன்னிலையில் மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் தான் லாரி கேட்டார் எனக் கூறினார்.
இது குறித்து வட்டாட்சியர் ரேணுகா தேவியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில்கூற மறுத்துவிட்டார். ஆனால் அத்தடியான் என்பவர் வட்டாட்சியர் அருகேயே நின்று கொண்டு வட்டாட்சியர் சமயபுரம் பகுதியில் ரூ.3 கோடி மதிப்பில் கட்டும் வீட்டிற்கு தான் மணல் செல்கிறது எனவும், தொடர்ந்து இப்பகுதியில் நடக்கும் தொடர் மணல் திருட்டுக்கு வட்டாட்சியர் தான் காரணம் என்றும் கூறினார்..
இதற்கும் வட்டாட்சியரிடம் விளக்கம் கேட்டால் பதில் கூற மறுத்து விட்டார். சம்பவ இடத்திற்கு வந்த மண்ணச்சநல்லூர் போலீஸார் லாரி ஓட்டுநர், லாரி உரிமையாளர் நந்நகுமார், மண்ணச்ச நல்லூர் வருவாய் வட்டாட்சியர் ரேணுகாதேவி மற்றும் அவரது ஜீப் ஆகியவற்றை பொது மக்களிடம் இருந்து மீட்டனர்..
பின்னர் லாரியையும், லாரி ஓட்டுநர், லாரி உரிமையாளர் மகன் நந்தகுமார் ஆகியோரை கைது செய்து மண்ணச்ச நல்லூர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.. திருவாசி கிராமத்தை சேர்ந்த விவசாய ஒருங்கிணைப்பு குழு தலைவர் அன்புசெழியன் தொடர் மணல் திருட்டில் ஈடுபடும் திருடர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு அதிகார துஷ்பிரயோகம் செய்யும் வட்டாட்சியர் ரேணுகாதேவி மீது குண்டர் சட்டத்தின் படி வழக்கு பதிய புகார் கொடுத்தார்!


