மெக்கா:
ரமலான் நோன்புக் காலத்தில் மெக்காவில் உள்ள மசூதியில் தற்கொலைப் படை பயங்கரவாதி குண்டு வெடிக்கச் செய்ததில் 11 பேர் காயம் அடைந்தனர்.
சவூதி அரேபியாவில் உள்ள மெக்கா நகரமானது இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமாக கருதப்படுகிறது. ரமலான் மாதம் என்பதால் தற்போது அங்கு லட்சக்கணக்கானோர் குவிந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று பிற்பகலில் அங்குள்ள மசூதியில் ஏராளமானோர் வழிபாடு நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது, மசூதிக்கு வெளியே கடும் பாதுகாப்பு வளையத்தையும் மீறி பயங்கரவாதி ஒருவன், வெடிகுண்டுகளுடன் உள்ளே நுழைய முயற்சித்தான். அதைக் கண்ட போலீசார், அவன் மீது தாக்குதல் நடத்தினர். அப்போது அவன் தன்னிடம் இருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தான். இதில், அங்கிருந்த கட்டடம் சரிந்து விழுந்தது. இந்தச் சம்பவத்தில் 11 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதல் தொடர்பாக 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் போலீஸார் கூறியுள்ளனர்.
கடந்த வருடமும் ஜூலை மாதம் மற்றொரு புனித நகரமான மதீனாவில் இதே போன்று தற்கொலைப்படைத் தாக்குதலை ஐ.எஸ் அமைப்பினர் நிகழ்த்தினர். எனவே, இந்தத் தாக்குதலையும் அவர்கள் நடத்தியிருக்கலாம் என்ற வகையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ் தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க கூட்டுப்படையில் சவூதியும் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.