
ஆம்ஸ்டர்டாம்:
உங்கள் பிரதமர் உங்கள் பைகளில் இருப்பார் என்று நெதர்லாந்து இந்திய வம்சாவளியினரிடம் மோடி கூறினார்.
பிரதமர் மோடி தனது 2 நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு ஐரோப்பிய நாடான நெதர்லாந்து வந்தார். நேற்று அவர் நெதர்லாந்து பிரதமர் மார்க் ரட்டேயை ஆம்ஸ்டர்டாம் நகரில் சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே சமூக பாதுகாப்பு, நீர் மற்றும் கலாசார ஒத்துழைப்பு என 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இந்தச் சந்திப்பின்போது பருவநிலை மாற்ற ஒப்பந்தம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாடு ஆகியவற்றில் இருநாடுகளும் ஒத்துழைத்து செயல்படுவதை உறுதி செய்தனர்.
மார்க் ரட்டேயை சந்தித்த பிரதமர் மோடி, “இந்தியாவின் இயற்கையான கூட்டாளியாக நெதர்லாந்து திகழ்கிறது. இரு நாடுகள் இடையேயான உறவு பல நூற்றாண்டுகள் பழமையானது. அது மிகவும் வலிமையாக உள்ளது. ஏவுகணை தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு பிராந்திய நாடுகள் பட்டியலில் இந்தியா இடம் பெற நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி. உங்களது ஆதரவு இல்லையென்றால், இந்த அமைப்பில் இந்தியாவால் இடம் பெற்று இருக்க முடியாது“ என்று கூறினார்.
இதையடுத்து, நெதர்லாந்தில் வாழும் இந்தியர்களை அவர் சந்தித்தார். இந்தச் சந்திப்பில், “ஐரோப்பாவில் இங்கிலாந்துக்கு அடுத்து நெதர்லாந்தில்தான் அதிகமான அளவில் இந்தியர்கள் வாழ்கின்றனர். இங்கு வாழும் இந்தியர்கள், இந்தியாவின் வளர்ச்சியிலும் பங்குகொள்ள வேண்டும். நீங்கள் ‘நரேந்திர மோடி’ செயலியைப் பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். உங்கள் பிரதமர் உங்கள் பைகளில் இருப்பார்” என்று கூறினார் மோடி.



