
டெல் அவிவ்:
இந்தியப் பிரதமர் மோடியின் பயணத்தை இஸ்ரேலியர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் அணுகியிருக்கின்றனர் என்பதை அவருக்கு அளிக்கப் பட்ட வரவேற்பு எடுத்துக் காட்டுகிறது. நேற்று இஸ்ரேல் சென்று இறங்கிய மோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பளித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு, அவரைக் கட்டி தழுவி வரவேற்பளித்தார். மரபுகளை மீறி அவர் இறங்கி வந்ததுபோல், இஸ்ரேல் அதிபரும் இன்று இதுவரை பின்பற்றப்பட்டு வந்த நடைமுறைகளை மீறி, நேரடியாக வந்து கட்டித் தழுவி வரவேற்றார்.
இந்தியா-இஸ்ரேல் இடையிலான தூதரக உறவுகள் தொடங்கப்பட்டதன் 25ஆம் ஆண்டு நினைவாக பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். தனி விமானம் மூலம் இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் சென்று இறங்கிய மோடியை, அந்த நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ விமான நிலையத்துக்கே வந்து சிறப்பாக வரவேற்றார். வழக்கமான மரபுகளை மீறிய வகையில் பென் குரியான் விமான நிலையத்துக்கே நேரில் சென்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, இரு கரங்களை கூப்பியவாறு ‘தங்களது வரவு நல்வரவாகுக…’ என்று இந்தி மொழியில் கூறி மோடியை அன்புடன் வரவேற்றார். இந்தியா-இஸ்ரேல் இடையிலான கூட்டுறவுக்கு வானத்தை கூட எல்லையாக வைத்து அளவீடு செய்ய முடியாது என குறிப்பிட்ட பெஞ்சமின் நேதன்யாகு, உலகின் மிகப்பெரிய தலைவராக விளங்கும் மோடியுடன் இணைந்து நாம் இன்னும் அதிகம் சாதிக்கலாம் என்றும் மகிழ்ச்சியுடன் கூறினார்.
அவரது வரவேற்புக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, ‘இந்த பயணம் வரலாற்று சிறப்பு மிக்கதாக அமையும். இஸ்ரேலுடன் வலிமையான அசைக்க முடியாத நட்புறவை ஏற்படுத்துவதே எனது வருகையின் முக்கிய நோக்கம்’ என்று தெரிவித்தார். தீவிரவாதம் உள்ளிட்ட உலகின் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக நேதன்யாகுவுடன் விரிவான ஆலோசனை நடத்தவுள்ளதாகவும், எனது நண்பர் நேதன்யாகுவுடன் இணைந்து இஸ்ரேல் – இந்தியா இடையிலான நட்புறவுகளை எந்தெந்த துறைகளில் பலப்படுத்துவது என்பது தொடர்பாக விவாதிப்போம் என்று குறிப்பிட்டார்.
இன்று, இஸ்ரேல் அதிபரின் மாளிகைக்குச் சென்ற பிரதமர் மோடியை வழக்கமான மரபுகளை மீறிய வகையில் அதிபர் ரியுவென் ரிவ்லின், அவரது கார் நின்ற இடத்தின் அருகே சென்று கட்டித்தழுவி வரவேற்றார். முன்னர் இந்தியாவுக்கு சென்றிருந்ததை நினைவுகூர்ந்த ரிவ்லின், அங்கு பல சிறப்புக்குரிய இடங்களை கண்டுகளித்த நினைவலைகளை மோடியுடன் பகிர்ந்து கொண்டார். இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, இஸ்ரேல் நாட்டின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் வகையில் தனக்கு அழைப்பு விடுத்தமைக்காக நன்றி தெரிவித்தார். இஸ்ரேலுடன் அனைத்து துறைகளிலும் இந்தியா தொடர்ந்து இணைந்து செயலாற்றும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், தங்கள் நாட்டு அதிபர் மரபுகளை எல்லாம் புறம் தள்ளிவிட்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை கட்டித் தழுவி வரவேற்ற காட்சியை தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருவதை பெரும்பாலான மக்கள் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிகழ்வு இங்குள்ள மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடியும் தம் டிவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து தன் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
Held talks with @PresidentRuvi. We discussed a wide range of issues pertaining to #IndiaIsraelFriendship & other global issues. pic.twitter.com/4GEdikh9rG
— Narendra Modi (@narendramodi) July 5, 2017


