சிட்னி: போலீஸாரின் தேடுதல் வேட்டையில், ஆஸ்திரேலியாவில் பயங்கரவாதத் தாக்குதல் திட்டத்துக்கு தயாராக இருந்த ஐ.எஸ்.பயங்கரவாதிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் அவர்களின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் ஒரு ஓட்டலுக்குள் புகுந்த ஐ.எஸ்.தீவிரவாதிகள் ஒருவரை சுட்டுக் கொன்றனர். 17 பேரை 16 மணி நேரம் சிறைபிடித்து வைத்திருந்தனர். அதை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் போலீசார் திடீரென அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சிட்னியின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது ஒமர் அல்–குடோபி (24), முகமது கியாத் (25) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ஐ.எஸ்.தீவிரவாத இயக்க கொடி, பெரிய கத்தி, வீடியோ போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் 2 பேரும் ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. இவர்களை கைது செய்ததன் மூலம் பெரிய தீவிரவாத தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

