இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே, இலங்கையில் மோட்டார் சைக்கிளில் இருந்து மேலும் ஒரு வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த ஏப்.21 ஆம் தேதியன்று நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளது. மோசமாக படுகாயம் அடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்தக் கொடூரமான தாக்குதலுக்கு ஐஎஸ் – இஸ்லாமிக் ஸ்டேட் என்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
முன்னதாக, வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட லாரி ஒன்று கொழும்பு நகருக்குள் நுழைந்துள்ளதாக நேற்று உளவுத் தகவல் கிடைத்ததை அடுத்து கொழும்பு நகர் முழுவதும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.
இன்று அத்தகைய சோதனைகளின் போது, கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் உள்ள சவோய் தியேட்டர் அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வெடி குண்டு இருப்பதாக சந்தேகத்தின் பேரில் சோதனை செய்யப் பட்டது. இதற்காக பெட்டியை சிறிய வெடி வைத்து திறந்து பார்த்த போது, வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.