உலகக் கோப்பை போட்டியில் முதல்முறையாக கோப்பை வென்று அசத்தியது கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்து அணி!
இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையான ஆட்டத்தில் சூப்பர் ஓவரும் டையானதால் அதிக பவுண்டரிகள் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது! இது இங்கிலாந்துக்கு அமைந்த அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும்!
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த நியூசிலாந்து. 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்தது.
இதை அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 89 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், பின்னர் ஜோடி சேர்ந்த பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்டனர். பட்லர் 59 ரன்னில் ஆட்டமிழந்தார். வோக்ஸ் (2), பிளங்கட் (10) ஆட்டம் இழந்தாலும், பென் ஸ்டோக்ஸ் தனியாளாய் நம்பிக்கையுடன் ஆடினார். கடைசி ஓவரில் 15 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், முதல் இரண்டு பந்தில் ரன் எதுவும் எடுக்கப் படவில்லை என்பதால் பரபரப்பு ஏற்பட்டது. 3-வது பந்தில் சிக்ஸர் அடித்தார் பென் ஸ்டோக்ஸ். அடுத்த பந்திலும் ஓவர் த்ரோ மூலம் ஆறு ரன் எடுக்கப் பட இங்கிலாந்து ரசிகர்கள் நம்பிக்கை கொண்டனர்.
ஆனால் 5வது பந்தில் 2 ரன் எடுக்கும் முயற்சியில் அடில் ரஷித் ரன் அவுட் ஆனார். கடைசி பந்தில் 2 ரன் எடுக்க வேண்டிய நிலையில் 1 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே இங்கிலாந்தும் 241 ரன் எடுத்து, மேட்ச் “டை” ஆனது.
இதை அடுத்து சூப்பர் ஓவர் வீசப்பட்டது. இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தது. அந்த அணி சார்பில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் களமிறங்கி, 15 ரன் எடுத்தனர். தொடர்ந்து சூப்பர் ஓவரில் 16 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் நியூசிலாந்தின் நீஷம், குப்தில் இருவரும் எதிர்கொண்டனர். சூப்பர் ஓவரிலும் 15 ரன் எடுக்கப்பட, சூப்பர் ஓவரும் டிராவில் முடிந்தது.
இதையடுத்து அதிக பவுண்டரி அடித்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பையை முதல் முறையாக வென்று, கிரிக்கெட் கண்டறிந்த நாடு, கிரிக்கெட்டின் தாயகம் என்றெல்லாம் வர்ணிக்கப் படும் இங்கிலாந்து, உலகக் கோப்பையைப் பெற்று, 1975 முதல் நடைபெறும் உலகக் கோப்பை போட்டிகளில் ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத கிரிக்கெட்டின் தாயகம் என்ற அவப்பெயரைத் துடைத்தெறிந்தது. இதற்காக அந்த நாடு 44 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று!