தேசியக் கல்விக் கொள்கை – விவாதக் கூட்டம்!
தமிழகக் கல்வித் துறை அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்காமல் புறக்கணிப்பு! ஏன் பங்கேற்று அதில் தங்கள் கருத்து எதுவானாலும் வலியுறுத்தலாமே?
தேசியக் கல்விக் கொள்கையில் ஏதேனும் பாதகமான அம்சங்கள் இருந்தால் – வேறுபாடுகள் இருந்தால் – சுட்டிக் காட்டலாமே?
ஐந்தாம் வகுப்பு வரை அவரவர் தாய் மொழியில் கல்வி என்பது தேசியக் கல்விக் கொள்கையின் முக்கிய அம்சமாயிற்றே!
அதை அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு – பத்தாம் வகுப்பு முடியும் வரை – ஆங்கில மொழிப்பாடம் தவிர- அனைத்துப் பாடங்களும் தமிழில் இருக்க வேண்டும் – என்று இன்னும் சற்று உயர்த்தி வாதாடி இருக்கலாமே?
தமிழ் எங்கள் மூச்சு, தமிழ் எங்கள் மூச்சு என்று முழங்குபவர்கள் – ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழியில் கல்வி – என்பதை வரவேற்று அதைப் பத்தாம் வகுப்பு வரை என்றல்லவா உயர்த்துமாறு கோரி இருக்க வேண்டும்?
தமது தேர்தல் அறிக்கையில் – “ஸ்பானிஷ், ஜெர்மன், ஃபிரெஞ்ச், இப்படி ஏதேனும் ஒரு மொழியை கற்க வகை செய்வோம்”- என்று அறிக்கை விட்டவர்கள்…
மூன்றாவதாக ஒரு உலக மொழியைக் கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு கூட்டத்தில் கலந்து கொண்டு வலியுறுத்தி இருக்கலாமே?
மூன்று மொழி கற்பது என்பது திமுகவுக்கு இணக்கமான ஒன்று என்பது – அவர்கள் தேர்தல் அறிக்கைப் படியே உறுதியான பிறகு அந்த மூன்றாவது மொழி ஏதோ ஒரு உலக மொழி என்பது ஒருபுறம் இருக்கட்டும் – உள்நாட்டு மொழி ஹிந்தியாகவே இருந்தால்தான் என்ன?
“இந்தியைப் படிக்காதே என்று கூறவில்லை – திணிக்காதே என்றுதான் கூறுகிறோம்”- என்று வாய் சாலகமாகப் பேசுபவர்கள்…
சரி- திணிக்க வேண்டாம் – அதை விருப்பப்படுவோர் கற்பதற்கு வகை செய்து தாருங்கள் – என்று மத்திய அரசிடம் – அதாவது “ஒன்றிய அரசிடம்”- கோரி இருக்கலாமே?
இந்தி திணிப்பை எதிர்ப்பது நியாயம் – ஆனால் இந்தியை விரும்பியோர் படிப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தருவது அரசின் கடமை அல்லவா?
‘தட்சிண பாரத ஹிந்தி பிரசார் சபா’- இருக்கிறதே – அதைத் தாண்டி பள்ளிகளில் எதற்கு வசதி தர வேண்டும்? – என்று கேட்கலாம்!
ஆனால் CBSE பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் பலவற்றில் ஹிந்தியை ஒரு மொழிப் பாடமாக வைத்தே +2 வரை படிக்கும் வசதி உள்ளதே?
LKG முதல் +2 வரை தமிழை ஒரு மொழிப்பாடமாகக் கூடப் படிக்காமல் – தமிழே அறியாமல் – ஒரு மாணவன் அப்படியே பட்டவகுப்பு, முதுநிலை எல்லாம் படிக்கும் நிலை தமிழகத்தில் உள்ளதே?
இந்த தமிழே படிக்காமல் – ஹிந்தியை மொழிப்பாடமாகக் கொண்டு கடந்து செல்லும் வசதி – பணம் படைத்த வசதியான தனியார் CBSE/ METRIC பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே!
தூக்கு போணியில் சோறு கட்டிக் கொண்டு வந்து, அரசாங்கம் தரும் இலவச சைக்கிளில் வந்து பயிலும் ஏழை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாவம் இப்படி ஹிந்தி, ஃப்ரெஞ்ச், ஜெர்மன் போன்ற மொழிகளைக் கற்கும் வாய்ப்பு அறவே இல்லை!
எனவே ஏழை – எளிய – நடுத்தர வர்க்க கிராமப்புற, சிற்றூர் அரசுப் பள்ளி மாணவ மாணவியரும் ஹிந்தி, ஃப்ரெஞ்ச், ஸ்பானிஷ், ஜெர்மன் மொழிகளைப் பயிலும் வாய்ப்பு வர வேண்டும்!
திமுகவுக்கு – “மும் மொழிக் கொள்கை”- என்றால் ஹிந்தி மட்டும்தான் தீண்டத் தகாத மொழி!
இந்தி – அது செந்தீ!
தமிழன்னையை அழிக்க வந்த அரக்கி! இந்தி ஒழிக! ஆனால் மற்ற ஐரோப்பிய மொழிகளால் திமுகவுக்கு தீட்டு இல்லை!
எனவேதான் அவர்கள் தேர்தல் அறிக்கையில் ஜெர்மன், ஃப்ரெஞ்ச், ஸ்பானிஷ், ஸ்வீடிஷ்… மொழிகளைக் கற்கும் வாய்ப்பை உருவாக்குவோம் என்று தேர்தல் அறிக்கையில் கூறி இருக்கிறார்கள்!
எனவே அந்த செருமானிய, பிரெஞ்சு, சுபாநீச், சுவீடிச்… மொழிகளைக் கற்றுத்தர ஏதுவாக – தேசிய கல்விக் கொள்கையில்….
என்னென்ன அம்சங்களை சேர்க்க வேண்டும் என்றெல்லாம் தமிழக அரசு தனது கருத்தை வலியுறுத்தி இருக்கலாமே?
எதிர்க் கட்சியாக இருக்கும் போது புதிய கல்விக் கொள்கையை – அல்ல தேசியக் கல்விக் கொள்கையை எதிர்த்துக் கொடி பிடிப்பது என்பது வேறு!
ஆளுங்கட்சி ஆன பின்பு அப்படித் தாங்கள் எதிர்த்ததின் காரணங்களை, விமர்சித்த அம்சங்களை ஒரு உரிய அரங்கத்தில் (PROPER FORUM) பதிவு செய்யக் கிடைக்கும் வாய்ப்பை நழுவ விடுவது என்பது வேறு!
காவிரி நதி நீர் ஒப்பந்தம் பற்றிக்கூட கடந்த காலங்களில் திமுக விமர்சித்து இருக்கிறது – அதற்கு GENUINE ஆகவே மாற்றுக் கருத்து கூட இருக்கலாம்!
அதற்காகக் காவிரி மேலாண்மை வாரியம் கூட்டப்பட்டால் தமிழக விவசாய அமைச்சரையோ / நீர்ப்பாசன அமைச்சரையோ அனுப்பாமல் புறக்கணிக்குமா தமிழக அரசு?
- முரளி சீதாராமன்