தி மு கவின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.பி.வில்சன் அவர்கள் பாராளுமன்றத்தில் சூரிய மின் திட்டங்கள் மற்றும் காற்றாலை மின் திட்டங்கள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இதற்கு துறை அமைச்சர் விரிவான விளக்கங்களையும், புள்ளி விவரங்களையும் அளித்திருந்தார் என திரு. வில்சன் அவர்களே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
தமிழகம் குறித்த அவரது அக்கறையையும், மாற்று எரிசக்தி குறித்த அவரின் ஆர்வத்தையும் நாம் வரவேற்கும் அதே நேரத்தில், இந்த கேள்விகள் இத்திட்டத்தை செயல்படுத்தும் தமிழக அரசுக்கும் பொருந்தும் என்ற அடிப்படையில் சூரிய மின் திட்டங்கள் குறித்த அவரின் கேள்விகளுக்கு தமிழக அரசின் பதில் என்னவாக இருக்குமோ நமக்கு தெரியாது. ஆனால், நம் பதில்கள் இதோ,
- சூரிய மின் திட்டங்கள் மற்றும் காற்றாலை மின் திட்டங்களில் முதலீடுகள் குறைந்துள்ளதா? குறிப்பாக தமிழகத்தில்?
பதில் : ஆம். குறைந்துள்ளது. ஏனெனில், சூரிய மின் உற்பத்தி குறித்த கொள்கைகள் தமிழகத்தில் முறையாக வகுக்கப்படவில்லை.
2.சூரிய மற்றும் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிப்பதில் சுணக்கம் ஏன்? குறைந்தது ஏன்?
தொழில் நிறுவனங்களுக்கு இந்தக் கட்டமைப்பை நிறுவ அனுமதி கிடைப்பது பெரும் சிரமமாக உள்ளது. தமிழ்நாடு ஆற்றல் வளர்ச்சித் துறையின் வழியாக, சூரிய ஆற்றல் தொடர்பான தொழில்களுக்கு, 30 நாள்களுக்குள் அனுமதியளிக்க வேண்டும். இது தொடர்பான பல்வேறு அனுமதிகள், சான்றிதழ்கள் பெறுவதில் சிக்கல்களை சந்திக்கிறார்கள் முதலீட்டாளர்கள். மானியம் குறித்து மத்திய அரசை கேள்வி கேட்கும் மாண்புமிகு உறுப்பினர் அவர்கள், அனுமதி மற்றும் சான்றிதழ்கள் பெறுவதற்கு மிக பெரிய தொகை லஞ்சம் மற்றும் ஊழலாக கேட்கப்படுகிறது என்பதை மறுப்பாரா? 1 மெகாவாட்டுக்கு இவ்வளவு தொகை லஞ்சம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது கொடுமையிலும் கொடுமை.
- மாற்று எரிசக்திக்கு மேலும் மானியங்களை அளிக்க மத்திய அரசிடம் திட்டங்கள் உள்ளதா? பதில் : மானியம் வழங்கப்படுகிறது. ஆனால், அனுமதி மற்றும் பாதுகாப்பு சான்றிதழ் பெறுவதற்கு லஞ்சம் பெறப்படுவதால் மத்திய அரசு வழங்கும் மானியம் லஞ்சமாக செலவிடப்படுகிறது என்பதை உணருங்கள். மத்திய அரசு கொடுக்கும் மானியம் குறித்து கேட்கும் நீங்கள் அனுமதி மற்றும் உரிமத்திற்கு லஞ்சம் வசூலிக்கப்படுவது குறித்து கேட்பீர்களா?
- மாற்று எரிசக்தியை முழுதாய் பயன்படுத்துவதற்கான, சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்தியை முழுமையாக தமிழகத்தில் அதிகரிக்க மத்திய அரசு கொள்கை ஏதும் வைத்துள்ளதா?
பதில் : மாநில அரசின் கொள்கை முடக்குவாதத்தால் மட்டுமே இந்நிலை. சூரிய ஒளி உற்பத்தியாளர்கள் மற்றும் பயனாளிகளுக்கு உரிய பலனை / பயனை மாநில அரசு வழங்காததே சூரிய ஒளி உற்பத்தி குறைந்ததற்கு காரணம். மேலும், அதிகாரிகளை சுதந்திரமாய் இயங்கவிடாதது மட்டுமல்ல, விண்ணப்பங்களை பெறுவதற்கு முன்னர், துறை அமைச்சரின் ஒப்புதலை பெற வேண்டும் என்ற எழுதப்படாத விதியினால் தான் குறைகிறது.
- ஆம் எனில் அதன் விவரங்களையும், இல்லை எனில் அதற்கான காரணங்களையும் கூறுக.
ஆம். மத்திய அரசு பல சலுகைகளை, கட்டமைப்புகளை கொடுத்துள்ளது. ஆனால், அனுமதி மற்றும் விண்ணப்பம் பெறுவதற்கே லஞ்சம் மற்றும் ஊழலினால் தான் முதலீடுகள் குறைகிறது என்பதே உண்மை.விண்ணப்பத்தை சமர்பிப்பதற்கே அமைச்சரின் அனுமதி பெற வேண்டும் என்ற எழுதப்படாத விதி ஏனோ?
திரு. வில்சன் அவர்கள் இந்த கேள்விகளை தமிழக அரசிடம் கேட்பார் என உறுதியாக நம்புகிறேன். அதற்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் பதிலளிப்பார் என நம்புகிறேன். முதல்வர் மு க ஸ்டாலின் இது குறித்து நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்.
தமிழகம் முன்னேற வேண்டும் என்ற ஆர்வத்துடன், லஞ்சம், ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன்,
- நாராயணன் திருப்பதி,
செய்தி தொடர்பாளர், பாரதிய ஜனதா கட்சி.