நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை நிறுத்தி விட துடிக்கிறது மத்திய பாஜக அரசு என்றும், இந்த திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை இந்த வருட நிதிநிலை அறிக்கையில் குறைத்து விட்டதாகவும் காங்கிரஸ், தி மு க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் விமர்சித்து வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
பாஜக அரசு பொறுப்பேற்பதற்கு முன் 2013-14 ல் இந்த திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 31,982 கோடி. 2014-15ல் பாஜக ஆட்சியில் 32977 கோடி, 2015-16ல் 37,341 கோடி, 2016-17ல் 48,215 கோடி, 2017-18ல் 55,166 கோடி, 2018-19ல் 61,815 கோடி, 2019-20ல் 71,687 கோடி என படிப்படியாக உயர்ந்து வந்தது. ஒவ்வொரு வருடம் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை விட அதிகமான தொகையே செலவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், 2020-21 நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட தொகையானது ரூபாய்.61,500 கோடி, ஆனால், செலவிடப்பட்டதோ, ரூபாய்.1,11,500 கோடி. அதே போல், 2021-22 நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டது 73,000 கோடி, செலவிடப்பட்டது ரூபாய்.98,000 கோடி. கொரோனா நோய் தொற்று அதிகம் இருந்த அந்த இரண்டு வருடங்களில் வேற்று மாநிலங்களில் பணிபுரிந்து கொண்டிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் அளிப்பதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட அதிகமாக செலவிடப்பட்டது. வேலை வாய்ப்பிழந்த அவர்களின் இன்னலை துடைக்க மத்திய அரசு உதவி செய்தது. 2020-21 லிருந்து நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வருடம் இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூபாய் 73,000 கோடி. ஆனால், செலவிடப்பட்ட தொகை நிதியாண்டின் முடிவில் அதிகமாகவே இருக்கும்.கொரோனா நோய் தொற்றினால் உற்பத்தி மாநிலங்களில் பணியாற்றிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் தங்களின் சொந்த மாநிலத்திற்கு சென்ற நிலையில், 2020-21. 2021-22 ஆகிய இரு வருடங்களில் அதிக நபர்களுக்கு அதிக நிதி ஒடுக்கப்பட்டது, கடந்த வருடத்திலிருந்து அவர்கள் தங்களின் பணிக்கு திரும்பி வந்து உற்பத்தியை பெருக்கும் முயற்சியில் கடினமாக பணியாற்றி வரும் நிலையில், ஏற்கனவே இந்த திட்டத்தில் பணியாற்றி வரும் நபர்களுக்கு, அதிக நாள், அதிக வருமானம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதனடிப்படையில் இந்த ஆண்டு இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி சராசரியாக ஒவ்வொரு வருடமும் அதிகரிக்கும் விகிதத்திலேயே உள்ளது என்பதை பொது அறிவு உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள்.
2014 ம் ஆண்டுக்கு முன் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட ஊதியத்தில், மூன்றில் இரு பங்கு இடைத்தரகர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் லஞ்சமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், பாஜக அரசு பொறுப்பேற்ற பின்னர், பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக ஊதியம் செலுத்தப்படுவதால், முழு தொகையும் மக்களை சென்றடைகிறது. இந்த திட்டத்தில் லஞ்சம், ஊழலை ஒழித்து அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றியது பாஜக அரசு. கடந்த ஒன்பது வருட பாஜக ஆட்சியில், இது போன்ற மக்கள் நல திட்டங்களில் போலிகளையும், மோசடிகளையும் ஒழித்தததால் இது வரை சேமிக்கப்பட்டுள்ள தொகை ரூபாய் 2.50 இலட்சம் கோடி!!!
ஆனால், இந்த திட்டத்தை பாஜக அரசு முடக்க பார்ப்பதாக எதிர்க்கட்சிகள் சொல்வதில் உள்நோக்க அரசியல் மட்டுமல்ல, வன்மமும் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இது நாள் வரை இந்த திட்டத்தில் ஊழல் செய்து கொண்டிருந்தவர்கள் இனி செய்ய முடியாது என்பதை உணர்ந்தே இது போன்ற புரளியை கிளப்பி விட்டு கொண்டிருக்கிறார்கள். இந்த வருட நிலைநிதி அறிக்கையில் ரூபாய். 60,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது கொரோனா பாதித்த வருடங்களை தவிர்த்து ஒப்பிடும் போது, சராசரியாக நிலையான ஏற்றமே.
2013ல் 31.000 கோடியாக இருந்த ஒதுக்கீடு தற்போது இரு மடங்காக பெருகி 60,000 கோடிக்கும் மேலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும், லஞ்சம், ஊழலை ஒழித்து பயனாளிகளுக்கு உரிய ஊதியம் சென்று சேர்வதற்கு உரிய நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசு எடுத்து வருவது கண்கூடாக உள்ள நிலையில், அரசியல் உள்நோக்கத்தோடு எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது மலிவான அரசியல் மட்டுமல்ல மக்கள் விரோத நடவடிக்கையும் கூட..
நாராயணன் திருப்பதி.