
நவோதயாவை தடுக்காதீர்: உச்ச நீதிமன்றம்
“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை? எல்லா மாநிலங்களிலும் நவோதயா பள்ளிகள் உள்ளன. நீங்கள் உங்களது சொந்த கல்வி முறையை வைத்திருக்கலாம், ஆனால், மத்திய அரசின் பள்ளிகளை தடுக்காதீர்கள்” – தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி தொடர்பான வழக்கின் விசாரணையில் உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா கருத்து!
இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?
உச்ச நீதிமன்றம்: “ஒரு மாவட்டத்திற்கு இரண்டு பள்ளிகள் என்ற அடிப்படையில், தமிழ்நாட்டில் சுமார் 80 பள்ளிகளை இலவசமாக அமைக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது. இந்தப் பள்ளிகளில் வழங்கப்படவுள்ள தரத்துக்கு இணையான கல்வியைப் பெற, இன்று பல தனியார் பள்ளிகளில் ஆண்டுக்கு இரண்டு லட்சம் ரூபாய் வரை பெற்றோர்கள் கட்டணம் செலுத்துகிறார்கள்.
ஒரு பள்ளிக்கு சராசரியாக 2,000 மாணவர்கள் சேர்ந்தாலும், சுமார் 80 ஆயிரம் மாணவர்களுக்கு இலவசமாக உயர்தர கல்வி கிடைக்கும். அதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கல்விச் செலவு குறையும். இதனால் பயன் அடைவது மாணவர்களும் பெற்றோர்களும்தானே? பிறகு ஏன் அனுமதி கொடுக்காமல் தடுக்கிறீர்கள்?
மூன்றாவது மொழியாக இந்தி கற்பிக்கப்படும் என்பதற்காகவே இந்தப் பள்ளிகளை அனுமதிக்க மாட்டோம் என்று சொல்லுகிறீர்கள். ஆனால், அந்த முடிவை பெற்றோர்களும் மாணவர்களும் எடுக்க வேண்டியதல்லவா? உண்மையிலேயே அவர்களுக்கு விருப்பமில்லை என்றால், அவர்கள் அந்தப் பள்ளிகளில் சேர மாட்டார்கள். மாணவர்கள் இல்லையெனில், பள்ளிகள் இயல்பாகவே மூடப்படும். ஆனால், பள்ளிகள் தொடங்குவதற்கு முன்பே, “இங்கு இந்தி கற்பிக்கப்படும்; அதனால் தமிழ் அழிந்துவிடும்” என்று அச்சத்தை உருவாக்கி மக்களை ஏன் குழப்ப வேண்டும்?
இந்த விவகாரத்தில் பழைய அரசின் நிலைப்பாடு எங்களுக்கு பிடிக்கவில்லை. தற்போது பதவியேற்றுள்ள புதிய அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவாக தெரிவிக்க வேண்டும்.”
இது நியாயமான கேள்விதான். படிக்க விருப்பம் உள்ளவர்கள் அந்தப் பள்ளிகளில் படிக்கட்டும்; விருப்பம் இல்லாதவர்கள் சேராமல் இருக்கட்டும். அந்தத் தேர்வு உரிமையை மக்களிடமிருந்து ஏன் பறிக்க வேண்டும்?
ஒருவேளை இந்தப் பள்ளிகள் தொடங்கினால், சில தனியார் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை குறைந்து, அவர்களின் வணிகம் பாதிக்கப்படும் என்ற அச்சம்தான் இதற்குப் பின்னால் இருக்கிறதா என்ற சந்தேகமும் எழுகிறது. புதிய அரசு இந்த விவகாரத்தை அரசியல் கண்ணோட்டத்தில் அல்ல, மாணவர்களின் எதிர்காலம் மற்றும் பெற்றோரின் நலன் என்ற அடிப்படையில் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
பதிவு: எம். தங்க ராஜ்




