
ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவாக நடிகை கங்கனா ரனாவத் நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு, கடந்த 10ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து கங்கனா ரனாவத் கூறிய போது, இந்தப் படத்திற்காக மிகவும் சிரமப்பட்டு நான் தமிழ் பேச கற்றுக் கொண்டு வருகிறேன்! மேலும் அரசியல்வாதிகளைப் போல வணக்கம் சொல்வதையும் நான் கற்றுக்கொண்டு வருகிறேன் என்று கூறினார்.
தமிழகத்தின் சிங்கம் என வட இந்தியர்களால் வர்ணிக்கப் பட்ட ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் கடைசிக் காலத்தில் அப்பலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப் பட்டு, வெளி உலகுக்கு தெரியாமல் இருட்டடிப்பு செய்யப் பட்டவிதத்தை பலரும் விமர்சித்து வந்தனர்.
ஒரு மாநில முதல்வரை இப்படி இருள் சிறையில் தள்ளுவதைப் போல் ஒரு கும்பல் கையில் எடுத்துக் கொண்டு வெளியுலகுக்கே தெரியாதவாறு செய்ததை ஒரு பத்திரிகையாளரோ, ஊடகமோ கூட அணுகி வெளியிட லாயக்கில்லாத நிலையில் தமிழக ஊடகங்கள் வக்கற்ற நிலையில் இருந்ததையும் வடநாட்டு ஊடகவியலாளர்கள் பெரும் குற்றச்சாட்டாகவே தெரிவித்திருந்தனர்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக., அமைச்சர்கள், ஜெயலலிதா இட்லி சாப்பிட்ட கதைகளைச் சொன்ன விதமும், ஐயா எங்களை மன்னிச்சுருங்க… என்று சொன்ன விதமும், அப்பலோ மருத்துவமனை, ஜெயலலிதாவுக்கு சிகிச்சைக்கு ஆன செலவு பில் தொகை என்று வெளியிட்டு, 2 இட்லிக்கு ரூ. ஒரு கோடி செலவானதை எடுத்துக் காட்டிய விதமும், தமிழகத்தில் பலருக்கும் குமட்டலையே ஏற்படுத்தியது.
ஆறுமுகசாமி ஆணையம் என இந்த விவகாரத்தை விசாரிப்பதற்கு மாநில அரசு அமைத்தாலும், ஜெயலலிதா வாழ்க்கையில் வெளிவராத பல உண்மைகள் இன்னமும் மூடிக் கிடந்து உறங்கிக் கொண்டிருக்கின்றன. இது போன்ற காட்சிகள் அரசல்புரசலாகவாவது இந்தத் திரைப்படத்திலாவது வெளிவருமா என்று தமிழக ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.


