எனக்கு அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்குகள் எதுவும் இல்லை என நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் இணைய தள டிவிட்டர் பக்கங்களில் இணைந்து அவ்வப்போது தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
ஆனால் நடிகர் அஜீத்குமார் அதுபோல் இணைய தளத்தில் எந்த பக்கத்திலும் இணையவில்லை. ஆனால் அவரது ரசிகர்கள் ஏராளமானவர்கள் இதுபோன்ற இணைய தள பக்கங்களை தொடங்கி அதில் அஜீத் பற்றிய தகவல்களை வைரலாக்குகின்றனர்.
இந்நிலையில் நேற்று அஜீத்குமார் பெயரில் அவரது கையெழுத்திட்ட ஒரு கடிதம் இணையதளத்தில் வெளியானது.
அதில்,’என்னுடைய ரசிகர்களுக்கு இந்த அறிக்கை. பல வருடங்களுக்கு முன்னர் அனைத்து சமூக வலை தளங்களிலிருந்தும் நான் ஒதுங்கியிருந்ததுடன் எனக்கான மன்றங்களையும் கலைத்திருந்தேன். இதற்கான காரணங்களை பல முறை நான் உங்களிடம் தெரிவித்திருந்தேன். இந்நிலையில், தற்போது மீண்டும் சமூகவலை தளங்களில் இணைய வேண்டிய காலம் வந்துவிட்டது.
அந்த வகையில் இந்த அறிக்கையின் மூலம் இணைய தளத்தில் இணைய இருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்வதுடன் நீங்கள் என்னுடன் இணைந்து கொள்ளலாம்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து அஜீத்குமார் மேலாளர் சுரேஷ் சந்திரா கூறுகையில்; இணைய தளத்தில் இணைவதாக அஜீத் சார் அறிக்கை எதுவும் வெளியிடவில்லை. யாரோ போலியாக இந்த அறிக்கையை தயாரித்து போலியாக அஜீத் போல் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ளனர்.
அந்த நபர் யார் என்பதை தேடி வருகிறோம். தற்போதைக்கு அந்த கடிதம் வெளிநாட்டிலிருந்து வந்தது போன்று ஐபி அட்ரஸ் காட்டுகிறது என கூறினார்.
இந்நிலையில் எனக்கு அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்குகள் எதுவும் இல்லை என நடிகர் அஜித்குமார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
எந்த சமூக ஊடகங்களிலும் இணைய விருப்பமில்லை. சமூக ஊடகங்களில் எந்தவொரு கருத்தையும், ரசிகர் பக்கத்தையும், குழுவையும் ஆதரிக்கவில்லை. மீண்டும் சமூக ஊடகங்களில் சேரப்போவதாகக் கூறி எந்தக் கடிதத்தையும் வெளியிடவில்லை.
தவறான கடிதத்தை வெளியிட்டு கையெழுத்து மோசடி செய்த நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.