
நடிகை வாணி போஜனைக் கேட்டு போனில் தொல்லை கொடுப்பதாக ரியல் எஸ்டேட் அதிபர் ‘ஓ மை கடவுளே’ பட இயக்குநர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.
‘ஓ மை கடவுளே’ பட இயக்குநர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் பூபாலன் என்பவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், ‘கடந்த 25 நாட்களுக்கு முன்பு ‘ஓ மை கடவுளே’ என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை அஷ்வத் மாரிமுத்து என்பவர் இயக்கி உள்ளார். அசோக் செல்வன் கதாநாயகனாகவும், வாணி போஜன் கதாநாயகியாகவும் நடித்திருப்பார்.

இந்தப் படத்தில் சின்னத்திரை நயன்தாரா என்றழைக்கப்படும் வாணி போஜன், மீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். படத்தின் ஒரு காட்சியில் நாயகி வாணி போஜன், நாயகனுக்கு தனது செல்போன் எண்ணைக் கொடுப்பார்.
அந்த எண் நான் பல வருடங்களாக பயன்படுத்தி வரும் செல்போன் எண் என பூபாலன் கூறியுள்ளார். படத்தைப் பார்த்தவர்கள் உண்மையில் வாணி போஜனின் செல்போன் எண் என எண்ணிக் கொண்டு தினமும் எனக்கு போன் செய்கிறார்கள்.
தினமும் 50க்கும் மேற்பட்ட நபர்கள் போன் செய்து, வாணி போஜன் இருக்கிறாரா, நான் அவரிடம் பேச வேண்டும் என தொல்லை கொடுத்து வருகின்றனர். நடுராத்திரி, எது எதுக்கோ போன் செய்து தொந்தரவு செய்கிறார்கள்.

இது வாணி போஜனுடைய நம்பர் இல்லைன்னு சொன்னாலும் திட்டுகிறார்கள். இதனால் என் தொழிலில் மந்த நிலை ஏற்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன்.
எனவே எனது செல்போன் எண்ணை ‘ஓ மை கடவுளே’ படத்தில் பயன்படுத்திய, இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து மீது நடவடிக்கை எடுக்கவும், மீண்டும் தமக்கு வாணி போஜனை கேட்டு போன் செய்யும் பிரச்னையில் இருந்து விடுவிக்கவும் ஆவணம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நான், தனது வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள் என அனைவருக்கும் ‘ஓ மை கடவுளே’படத்தில் பயன்படுத்திய செல்போன் எண்ணைத் தான் கொடுத்திருப்பதாகவும் பூபாலன் தெரிவித்துள்ளார்.


