தமிழ் சினிமாவில் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்படும் திரைப்படங்கள் சமீப காலங்களில் அதிக வரவேற்பைப் பெற்று வருகின்றன. இத்தகைய படங்கள் மக்களிடையேயும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெறுகின்றன.
முன்னாள் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டு கீர்த்தி சுரேஷ் நடித்த நடிகையர் திலகம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெற்றித் திரைப்படமாக அமைந்தது. தற்போது தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் நடிகையுமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பலர் திரைப்படமாகவும், வெப்சீரிஸாகவும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், பளுதூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கையைப் படமாக எடுக்க இருக்கிறார்கள். 2000 ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 69 கிலோ எடைப்பிரிவில் பளுதூக்கும் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல்பெண் மல்லேஸ்வரிதான்.
சஞ்சனா ரெட்டி என்ற இயக்குநர் இந்தத் திரைப்படத்தை இயக்க இருக்கிறார். சத்யநாராயணா, கோனா வெங்கட் இப்படத்தை தயாரிக்க இருக்கிறார்கள். கர்ணம் மல்லேஸ்வரியாக நடிப்பதற்காக நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.
பளுதூக்கும் வீராங்கனையாக நடிப்பதால் அதற்காக முறைப்படி பயிற்சி எடுக்க வேண்டும் என்பதாலும் உடல் எடையை சற்று அதிகப் படுத்த வேண்டும் என்பதாலும் இந்த மூன்று பேரில் ஒருவரின் சம்மதத்திற்காக இயக்குநரும் தயாரிப்பாளரும் காத்திருக்கின்றனர்.