பிரபல பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் மறைவை அடுத்து, அவருக்காக திருவண்ணாமலை ரமணர் சந்நிதியில் மோட்ச தீபம் ஏற்றினார் இசையமைப்பாளர் இளையராஜா.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் (74). கிட்டத்தட்ட ஒரு மாத கால சிகிச்சையில் கொரோனா தொற்றில் இருந்து அவர் விடுபட்டார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
இந்நிலையில் செப்.25 அன்று வேறு சில உடல் நலப் பிரச்னைகளால் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் அரசு மரியாதையுடன் சனிக்கிழமை இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
எஸ்.பி.பி. மறைவுக்கு இளையராஜா இரங்கல் தெரிவித்து ஒரு பாடலும் பாடி இருந்தார். அதில் எஸ்.பி.பி. இல்லாத உலகம் தனக்கு சூன்யமாக தெரிவதாக கூறியிருந்தார். அந்தப் பாடல் சமூகத் தளங்களில் வைரலானது.
இந்நிலையில் எஸ்.பி.பி.யின் ஆன்மா சாந்தியடைய வேண்டி திருவண்ணாமலையில் உள்ள ரமணாசிரமத்தில் மோட்ச தீபம் ஏற்றி வழிபாட்டார் இளையராஜா. இந்தப் புகைப்படமும் இன்று சமூக வலைதளங்களில் வைரலானது.