தமிழ் சினிமா மட்டுமில்லாது தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் தமிழ் சினிமா குடும்பத்தில் இருந்து 30ஆண்டுகளுக்கு நாளைய தீர்ப்பு பட நாயகனாக அறிமுகமாகி இன்று வரையிலும்.அவர் வேறு யார் தி நேம் இஸ் விஜய்!இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் பாடகர் விஜய் வம்சி இயக்கத்தில் நடிக்கும் வாரிசு படத்தின் முதல் பார்வையை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தி யுள்ளார்.



1992 ஆம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு படம் மூலம் விஜய் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தை விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து ரசிகன், ராஜாவின் பார்வையிலே, கோயம்புத்தூர் மாப்பிள்ளை, லவ் டுடே ஆகிய படங்களில் நடித்தார்.1997 ஆம் ஆண்டு வெளியான ‘காதலுக்கு மரியாதை’ திரைப்படம் சினிமாவில் விஜய்க்கு தனி மரியாதையை பெற்று தந்தது. 2000 களில் குஷி, பிரியமானவளே, ஷாஜஹான், யூத் என காதல் மன்னனாக வலம் வந்தார். பின்பு திருமலை, கில்லி, திருப்பாச்சி படங்களில் ஆக்ஷன் ஹீரோவாக மிரட்டினார். தற்போது எந்த ஒரு கதாபாத்திரத்திலும் நடிக்கக்கூடிய சிறந்த நடிகராக விஜய் வலம் வருகிறார்.மேலும் விஜய் தனது படங்களின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில், ரசிகர்களுடன் உரையாடுவதை மிகவும் விரும்புவார். எல்லா இசை வெளியீட்டு நிகழ்ச்சியிலும் ரசிகர்களை ஊக்கப்படுத்த பல மோட்டிவேஷன் குட்டி ஸ்டோரியை கூறுவார்.

விஜய்யின் திரைபயண வாழ்க்கை யை எடுத்துப் பார்த்தால் அவரது ஆரம்ப கால படங்கள் அனைத்தும் காதல், காமெடி கதைக்களங்களை அடிப்படையாக கொண்டே உருவாக்கப்பட்டிருக்கும். ‘செந்தூரப்பாண்டி’, ‘ரசிகன்’, ‘சந்திரலேகா’ ‘கோயம்புத்தூர் மாப்பிள்ளை’ என வரிசைக்கட்டிக்கொண்டே போகலாம். அந்த சமயத்தில்தான், முழுக்க முழுக்க ஒரு காதல் கதை கொண்ட படமாக அவருக்கு வந்து சேர்ந்தது ‘பூவே உனக்காக’. ஒருதலை காதலர்களுக்கு அது அருமருந்து.
விஜய் சினிமா பயணத்தில் அவருக்கு பாராட்டையும், புகழையும் ஈட்டிகொடுத்து பேமிலி ஆடியன்ஸ்களை அவரை நோக்கி ஈர்த்த படம் ‘பூவே உனக்காக’. இன்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானால் அந்தப் படத்தை ஆர்வத்துடன் பார்க்கும் கூட்டம் இல்லாமல் இல்லை. மிகச் சிலருக்கு மட்டுமே இப்படி அமையும். ‘மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது’ என ஃபங்க் வைத்துக்கொண்டு, க்ளின்ஷேவில் மேல் பட்டன் போடாமல் விஜய் பாடும் அந்தப் பாடலுக்கு இன்றும் ரசிகர்கள் உண்டு.
அடுத்தடுத்து, ‘காலமெல்லாம் காத்திருப்பேன்’, ‘லவ் டுடே’, ‘நினைத்தேன் வந்தாய்’ போன்ற காதல் படங்களால் தன் கரியரை கட்டமைத்தார். அஜித்துக்கு ஒரு ‘காதல் கோட்டை’யைப் போல விஜய்க்கு ஒரு ‘காதலுக்கு மரியாதை’. அதேபோல ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘என்னென்றும் காதல்’ என ஒரே காதல் படமாக இறக்கித் தள்ளினார். இதில் பெரும்பாலான படங்கள் விஜய்க்கு கைகொடுத்து பேமிலி, யூத் ஆடியன்ஸ்கள் அவரை நோக்கி திரண்டனர். நடுநடுவே, ‘ஒன்ஸ்மோர்’, ‘மின்சாரக்கண்ணா’ போன்ற காமெடியாலும் வெகுஜன மக்களை ஈர்த்தார்.
2000-ம் ஆண்டுகளுக்கு பிறகும் கூட, ‘குஷி’, ‘பிரியமானவளே’ படங்களை கொடுத்தவர், ‘பிரண்ட்ஸ்’, ‘ஷாஜஹான்’ மூலம் மிகப்பெரிய இளைஞர் பட்டாளத்தை தனதாக்கிக்கொண்டார். 2003-க்கு பிறகு ‘திருமலைக்கு’ முன், பின் விஜயின் கரியரை இரண்டாக பிரிக்கும் அளவுக்கு மாஸ் படங்களை கொடுக்க ஆரம்பித்தார். திருமலையில் தொடங்கிய பயணம் ‘பீஸ்ட்’வரை நீண்டுகொண்டேயிருக்கிறது.
காதல் படங்களிலிருந்து மாஸ் படங்களுக்கு விஜய் மாறியபோது, இளையர்கள் கூட்டம் அவரை சூழ்ந்துகொண்டது. இடையில் ஃபேமிலி ஆடியன்ஸை விட்டுவிடக்கூடாது எனக் கருதியவர், ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’யை கொடுத்தார். ‘போக்கிரி’க்கு பிறகு விஜய்க்கு பெரிய சிக்கல். ‘குருவி’, ‘வில்லு’, ‘வேட்டைக்காரன்’, ‘சுறா’ என கன்டன்டே இல்லாத வெறும் மாஸை முதலீடாக கொண்ட படங்களில் நடித்தது ரசிகர்களிடையே எடுபடவில்லை.
இங்கே பிரச்சினை விஜய் எந்த இடத்திலும் தன்னை மாற்றிக்கொள்ளாதது. ‘திருமலை’ படத்திற்கு பிறகு அவரின் படங்களிலும், அவரது கெட்டப்பிலும் எந்த மாற்றமும் இல்லை. ஒரே மாதிரியான படங்களைத்தான் தேர்வு செய்தார். அதற்கு முற்றுப்புள்ளி போட்டது ‘நண்பன்’. அந்தப் படத்தில் எந்த மாஸும் இல்லாமல், கன்டென்ட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்திருப்பார் விஜய். ‘கத்தி’ கூட அவரது மாஸ் கரியரிலிருந்து சற்று விலகியே நின்றது. ‘பிகில்’ ஸ்போர்ட்ஸ் ட்ராமாவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் விஜய்க்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தது. இங்கே இதுதான் பிரச்சினை.
தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர்களுக்கு லாபம் ஈட்டித்தரும் நாயகனாக விஜய்யை முன்னிறுத்துவது தான் சிக்கல். இதனால் விஜயே கூட, மாஸ் வகையறாவில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டு நடிக்க தயாராக இல்லை. சவாலான, வித்தியாசமான கதாபாத்திரங்களை விஜய் தேர்வு செய்ய தயங்குவதற்கான காரணமும் கூட இதுதான்.
இந்த மாஸ் ஓவர்டோஸாகும்போது தான் ‘பீஸ்ட்’ படத்தின் ஜெட் ஓட்டும் காட்சிகள் நிகழ்கின்றன. அதற்காக விஜய் மாஸ் படங்களை தவிர்க்க வேண்டிய அவசியமும் இல்லை. மாறாக, கொஞ்சம் உருப்படியான படங்களை தேர்வு செய்து அவர் நடிக்கவேண்டிய தேவை இருக்கிறது.
கமர்ஷியல் படங்களிலும் கூட மாஸான காட்சிகளை உருவாக்கிவிட்டு, அதில் கதையை பொருத்துவதற்கு பதிலாக, கதைக்கு தேவையான இடங்களில் மாஸ் காட்சிகளை பொருத்துவதைத்தான் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
தற்போது வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் கூட, தான் இழந்த ஃபேமிலி ஆடியன்ஸை திரும்பப் பெறும் விஜய்யின் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
முழுக்க முழுக்க வணிக சினிமாவுடன், அவ்வப்போது சில கன்டென்ட் சினிமாக்களுக்கும் விஜய் முக்கியத்துவம் தந்து, தரமான சினிமாக்களை தமிழ் திரையுலகத்துக்கு வழங்க வேண்டும் என்பது தமிழ் சினிமா பற்றாளர்களின் பார்வையாக இருக்கிறது. சரி, அதுவும் வேண்டாம்; இதுவும் வேண்டாம்… விஜய்யின் தனித்தன்மையே சிறுவர் முதல் வயோதிகர் வரை அனைத்து தரப்பினரையும் என்டர்டெயின் செய்யும் வல்லமைதான். அவர் காலச் சூழலுக்கு ஏற்ப தரமான பொழுதுபோக்குத் திரைப்படங்களைத் தந்தாலே போதுமானது. அதற்கு, உச்ச நட்சத்திரமான விஜய், திறமையான இயக்குநர்களிடம் தன்னை ஒரு நடிகராக மட்டும் ‘முழுமையாக’ ஒப்படைக்க வேண்டும்.நடிகர் விஜய்க்கு ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் சாம்ராஜ்யம் உள்ளது.இருந்தும் அவரது நல்ல படங்களை மட்டுமே ரசிகர்கள் விரும்பி ரசிக்கின்றனர் தலைவா பீஸ்ட் போன்ற பல படங்களை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள வில்லை ஏன் என்பதற்கு விஜய் விடை காணவேண்டும்.