காவிரி மற்றும் ஸ்டெர்லைட்டுக்காக போராடி வரும் பல்வேறு கட்சியினர்களின் போராட்டங்கள் நேற்று முதல் ஐபிஎல் பக்கம் திரும்பியுள்ளது. சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியை நிறுத்தியே தீருவது என அரசியல் கட்சியினர் கொதிப்புடன் கிளம்பியுள்ளனர். இந்த நிலையில் இயக்குநர் பாரதிராஜாவும் ஐபிஎல் கிரிக்கெட் குறித்து கூறியுள்ளதாவது
“என் இனிய தமிழ் மக்களே…
நம் இனத்தை அழித்தார்கள்;
நாம் எதுவும் பேசவில்லை.
நம் மொழியைச் சிதைக்கிறார்கள்;
நாம் மவுனமாக இருக்கிறோம்.
நம் உரிமைகள் பறிக்கப்படும்போதும்
போராடாமலே இருக்கிறோம்.
உறைந்து போய்க்கிடக்கும்
நம் உணர்வுகளை
உசுப்பிவிட்டு,
நம்மைப் புரட்சியாளர்களாய்
மாற்ற எத்தனையோ
அமைப்புகள் போராடிக்
கொண்டிருக்கும்போது,
‘ஐபிஎல்’ என்னும் மாய உலகத்திற்கு
நம்மை அடிமைப்படுத்தி,
நம்முடைய தேசியப் புரட்சிக்குத்
தீவைக்கும் முட்டாள்தனமான
விளையாட்டை நிராகரிப்போம்!
தமிழ் மக்களின் ஒற்றுமை
கைகூடி வரும்போது,
கருக்கலைப்பு செய்யவரும்
எந்தவொரு நிகழ்வுக்கும் தடை விதிப்போம்!
தமிழா,
ஐபிஎல் என்னும் கிரிக்கெட்டை
நிராகரி.
நிறைய வேண்டியது
விளையாட்டு மைதானத்தின்
இருக்கைகள் அல்ல…
புரட்சியின் மைதானம்.
தமிழனை விளையாட்டாக
நினைத்து, கிரிக்கெட் விளையாட்டைப் புகுத்தும் மூடர்களே… எங்கள் தமிழர்களுக்கு
வீரவிளையாட்டும் தெரியும்
என்பதை நினைவில் வையுங்கள்.
இது எச்சரிக்கை அல்ல…
அன்புச் சுற்றறிக்கை.
உங்கள் ஐபிஎல் விளையாட்டை விளையாட வேண்டாம் என்று சொல்லவில்லை.
கொஞ்சம் ஒத்தி வையுங்கள்.
மீறி நடந்தால்,
அது ஐபிஎல் விளையாட்டாக இருக்காது.
மாறாக,
எங்கள் வீர இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக் காளைகளோடு களம் காணுவார்கள்
என்பதைத் தமிழ் இன உணர்வோடு
சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்”
இவ்வாறு பாரதிராஜா கூறியுள்ளார்.



