நீண்ட இடைவெளிக்குப் பின் ரகுமான் நடித்து பெரும் வெற்றியடைந்த படம் “துருவங்கள் பதினாறு’. இதையடுத்து ரகுமானிடம் கதை சொல்லும் இயக்குநர்கள் கணிசமாக உயர்ந்திருக்கிறார்கள்.இதில் அவருக்கு பிடித்த கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறார். அந்த வகையில் இவர் அடுத்து நடிக்கும் படம் “ஆபரேஷன் அரபைமா’.
தமிழ் சினிமாவில் ராணுவத்தை மையப்படுத்தி பல படங்கள் வந்திருக்கிறது.
முதன்முதலாக கடற்படையின் சாகசங்களை விளக்கும் வகையில் ஆபரேஷன் அரபைமா தயாராகி வருகிறது.டி.கே.ராஜிவ்குமார், மேஜர் ரவி ஆகியோரிடம் பணியாற்றி வந்த ப்ராஷ் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.தமிழ், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் உள்பட பல மொழி படங்களில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர் இவர். இந்திய ராணுவத்தில் அட்வெஞ்சர் பைலட்டாக பணி புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை டைம் அண்ட் டைடு ப்ரேம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
ப்ராஷ் பேசும் போது.. “நேர்மையும் துணிச்சலும் கொண்ட ஒரு கடற்படை அதிகாரியின் கதையை கருவாகக் கொண்ட சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் இது, சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறேன். இந்தப் படத்திற்கு கதையின் நாயகனாக ரகுமான் கிடைத்தது பெரிய பலம்.இந்தியா மலேசியா சிங்கபூர் சீனா தாய்லாந்து இலங்கை உள்ளிட்ட தெற்காசிய
நாடுகளின் கடற்படைகள் இணைந்து போதை மருந்து ஆயுதங்கள் கடத்தல் கும்பலுக்கு எதிரான சில நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அதில் சமீபத்தில் நடந்தது தான் ஆபரேஷன் அரபைமா. அந்த ஆபரேஷன் எப்படி நடந்தது அதற்கு பிறகு என்ன நடந்தது என்பது தான் கதை.நான் கற்பனை செய்து வைத்திருந்த கதாபாத்திரத்தை அச்சு அசலாக கண் முன் கொண்டு வந்து நிறுத்தினார் ரகுமான். கதையின் நாயகியாக “நாடோடிகள்’ அபிநயா நடிக்கிறார். இதில் இவர் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் மிகுந்த பொருட்செலவில் நவீன தொழில்நுட்பங்களுடன் இப்படம் வேகமாக உருவாகி வருகிறது. என்றார்.
டினி டாம், அரவிந்த் கலாதர், சஜி சுரேந்திரன், நேகா சக்சேனா, சாம்சன் டி.வில்சன், அனூப் சந்திரன், பாலாஜி, ரமேஷ், டேனி, மோகிதா பட்டக், மணிஷா உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. முருகன் மந்திரம் பாடல் வரிகளுக்கு ராகேஷ் பிரம்மானந்தம் இசையமைத்திருக்கிறார். பீனிக்ஸ் உதயன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.