தமிழகத்தில் கல்லூரிகள் எப்போது திறக்கப் படும் என்பது குறித்து மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவலால் பாதிப்பு பரவலாக அதிகரித்து வருகிறது. இதனால் நிறுவனங்கள் பலவும் தங்கள் நிறுவனத்தின் பணிகளை மீண்டும் தொடங்கி மேற்கொள்ள முடியவில்லை. ஆன்லைனில் தகவல்களைப் பரிமாறி மேற்கொள்ளப் படும் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீடுகளில் இருந்தே பணிகளை கவனிக்குமாறு அறிவுறுத்தியுள்ளன.
இது போல், முக்கிய துறையான கல்வித் துறையும் பெரும் சிக்கலில் இருக்கிறது. மிகச் சரியாக, ஆண்டுத் தேர்வுகள் தொடங்கி நடைபெறும் ஏப்ரல் மே மாதங்களில் ஊரடங்கு அமலாகி, மாணவர்கள் பலர் தேர்வுகளை எழுதியும் எழுதாமலும் என்று இரண்டுங்கெட்டான் நிலை ஏற்பட்டுவிட்டது. இதை அடுத்து, தேர்வுகள் ரத்து, ஒத்திவைப்பு என்றும், அடுத்த பருவத்துக்கான பாடங்கள் வகுப்ப்கள் தொடங்குவது குறித்தும் பேச்சு எழுந்தது. இந்நிலையில், பள்ளி , கல்லூரிகள் மாணவர்களுக்கு பாடங்களை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து கல்லூரிகள் இயங்காத சூழலில், மீண்டும் கல்லூரிகள் எப்போது திறக்க படும் என்பது குறித்து அமைச்சர் கே.பி. அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார்.
அதில், மாணவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை என்ற நிலை உருவான பின்னரே கல்லூரிகள் திறக்கப்படும். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முற்றிலும் முடிந்த பிறகே கல்லூரிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும்….
தனிமைப் படுத்தப் பட்டுள்ளவர்கள் தங்கியிருக்கும் கல்லூரிகளில் இருந்து, அவர்கள் முழுவதுமாக வெளியேற்றப்பட்ட பின்னர், அங்கே கிருமிநாசினி தெளிக்கப்பட்டு கல்லூரிகள் தூய்மைப்படுத்தப்படும். பின்னரே கல்லூரிகள் மாணவர்களுக்காக திறக்கப்படும்.
எந்த நேரத்திலும் பருவத் தேர்வுகளை நடத்துவதற்கு அரசு தயாராகவே உள்ளது. பொறியியல் கலந்தாய்வுக்கு ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்யவும் தமிழக அரசு தயாராக உள்ளது என்று கூறியுள்ளார் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்.