கணக்கு தணிக்கையாளர் பணிக்கான சி.ஏ தேர்வில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் இசக்கி ராஜ், 800-க்கு 553 மதிப்பெண்கள் பெற்று, அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
அகில இந்திய அளவில் கணக்கு தணிக்கையாளர் பணிகளுக்கான சிஏ தேர்வு 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்த தேர்வில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த இசக்கி ராஜ் என்பவர் 800-க்கு 553 மதிப்பெண் பெற்று பழைய பாடத்திட்டத்தில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
இதுகுறித்து இசக்கி ராஜ் தேர்வுத்தளம் ஒன்றுக்கு தெரிவிக்கும்பொழுது, ‘தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் என் தந்தையின் அறிவுரையின்படி 12-ஆம் வகுப்பு முடித்ததும் சி.ஏ படிப்பில் சேர்ந்தேன்.
ஆடிட்டர் செந்தில் என்பவரிடம் பணியாற்றினேன். ஆர்வம் காரணமாக கொரோனா ஊரடங்கு காலத்தில் இறுதி தேர்வுக்கு தயாராகினேன். நன்றாக தேர்வு எழுதினேன் என நம்பினேன். ஆனால் அகில இந்திய அளவில் முதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை’ என்றார். இசக்கி ராஜ் தன்னுடைய முதல் முயற்சியிலேயே இத்தேர்வில் வெற்றியடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த தேர்வில் பழைய பாடதிட்டத்தின்படி, சென்னையை சேர்ந்த மாணவி ஸ்ரீபிரியா இரண்டாவது இடமும், புதிய பாடத்திட்டடத்தின்படி தேசிய அளவில் மும்பையை சேர்ந்த கோமல் கிஷோர் ஜெயின் 75% மதிப்பெண்களுடன் முதலிடமும், சூரத் மாணவர் முதீத் அகர்வால் இரண்டாம் இடமும் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.