முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் கடைசி ஆசையை அவரது மகள் நிறைவேற்றி வைத்துள்ளார். இது குறித்த செய்தி வெளியான போது, பலரும் நெகிழ்ச்சியுடன் அந்தச் சம்பவத்தை தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி உடல்நலக் குறைவால் முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உயிரிழந்தார். அவர் காலமாவதற்கு சிறிது நேரத்துக்கு முன்னர், குல்பூஷண் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடிய வழக்குரைஞர் ஹரிஸ் சால்வேயிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர், மிகச் சிறந்த வரலாற்றுப் பூர்வமான வெற்றியை தது வாதத்திறனுக்காகப் பெற்றுத் தந்த ஹரீஷ் சால்வேக்கு தாம் வழக்குக்கான தொகையைத் தருவதாகக் கூறியிருந்தார்.
சுஷ்மா ஸ்வராஜ் காலமான போது, இந்த நிகழ்வு குறித்து ஹரிஸ் சால்வே நெகிழ்ச்சியாக கூறியிருந்தார்.
அப்போது அவர் ” அந்த சந்திப்பு மிகவும் உணர்வுபூர்வமான ஒன்று. ஆகஸ்ட் 6ஆம் தேதி அவரை சந்தித்த போது, அவர் எனக்குத் தர வேண்டிய ஒரு ரூபாய் கட்டணத்தை தாமே நேரில் வந்து தர வேண்டும் என்று கூறி தனது விருப்பத்தைத் தெரிவித்தார். ஆனால், அதை நானே தங்களது வீட்டுக்கு வந்து வாங்கிக் கொள்கிறேன் என நான் கூறினேன்.
அப்படியானால் சரி… மறு நாள் காலை ஆறு மணிக்கு வந்து வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறினார் சுஷ்மா ஸ்வராஜ். ஆனால் அன்று இரவே சுஷ்மா ஸ்வராஜ் காலமாகிவிட்டார். அவரது கரத்தால் நான் பெற இருந்த உயரிய மதிப்பு மிக்க அந்தப் பரிசு கிடைக்காமல் போய்விட்டது என்று தனது வருத்தத்தைத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சுஷ்மா சுவராஜால், ஹரிஸ் சால்வேவிற்கு தர இயலாமல் போன ஒரு ரூபாய் கட்டணத்தை சுஷ்மா சுவராஜின் மகள் பன்சூரி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து சுஷ்மா ஸ்வராஜின் கணவர் ஸ்வராஜ் கௌசல் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருக்கிறார். அதில்,“சுஷ்மா ஸ்வராஜின் கடைசி ஆசையை பன்சூரி நிறைவேற்றியுள்ளார். அவர் ஹரிஷ் சால்வேயை அழைத்து குல்பூஷண் ஜாதவ் வழக்கிற்கான அவருடைய கட்டணமான ஒரு ரூபாயை அளித்தார்” எனப் பதிவிட்டுள்ளார்.