கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ? (பாரதியார்)
“பிஷப் டாக்டர் ஜான்சன் தலைமையிலான பெரிய டயசீஸ் முழுவதுமாக இன்று சென்னையில் டாக்டர் முருகன் தலைமையில் இயங்கும் தமிழ்நாடு பாஜகவில் இணைந்தது மகிழ்ச்சியளிக்கிறது” என்று ட்விட்டரில் இந்தப் படத்டோடு பதிவிட்டுள்ளார் பாஜக தேசிய பேச்சாளர் டாம் வடக்கன்.
2019 தேர்தலுக்கு சற்று முன்பாக பாஜகவில் வந்து இணைந்தவர் இவர். காங்கிரசில் நீண்டநாள் சோனியா விசுவாசியாக இருந்த மலையாள கிறிஸ்தவர். “முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச்” என்ற ஆர் எஸ் எஸ் சார்பு அமைப்பை 15 வருடங்கள் முன்பு உருவாக்கிய ஆர் எஸ் எஸ் தலைவர் இந்திரேஷ்ஜியுடன் சேர்ந்து அதே பாணியில் “கிரிஸ்தவ ராஷ்ட்ரீய மஞ்ச்” என்று ஒன்றை இவர் உருவாக்க முயற்சிக்கிறாராம்.
நிற்க. தேசிய உணர்வும், இந்துப் பண்பாட்டின் மீது மரியாதையும், மதமாற்றத்தை எதிர்க்கும் கொள்கைகளும் கொண்ட கிறிஸ்தவர்கள் பாஜக, ஆர் எஸ் எஸ் இயக்கங்களில் சேர்வதை நான் முழுமையாக வரவேற்கிறேன். ஆதரிக்கிறேன்.
பெங்களூரின் Jerome Warrier கேரளத்தின் Godwin Joseph போன்ற இத்தகைய நண்பர்களை நான் சந்தித்து உரையாடியிருக்கிறேன். தங்களை Hindustani Christians என்று குறிப்பிடும் இந்த நண்பர்கள், வெளிப்படையாக கிறிஸ்தவ மதமாற்றங்களையும், இஸ்லாமிய பயங்கரவாதத்தையும் எதிர்த்து தொடர்ந்து குரல்கொடுத்து வருகின்றனர்.
ஆனால் டாம் வடக்கன் இப்படிப் பட்டவரல்ல என்பது அவர் செயல்பாடுகள் மூலம் தெளிவாகத் தெரிகிறது. பாஜக பல மாநிலங்களில் ஒரு பெரிய சக்தியாக வளர்ந்து வருவதால், அதனால் கிறிஸ்தவ ஆக்கிரமிப்புக்கும் மத அதிகார பீடங்களுக்கும் ஏதேனும் பிரச்னை வந்துவிடக் கூடாது என்பதைக் கணக்கிட்டு, கிறிஸ்தவர்களை கட்சிக்குள் ஊடுருவ வைக்கவேண்டும் என்பதே அவரது திட்டமாக உள்ளது. மதப்பிரசாரத்தையும் மதமாற்றத்தையுமே முழுநேர தொழிலாகக் கொண்ட பாதிரியார்கள் கட்சிக்குள் இணைவது என்பது இதன் ஒரு பகுதி போலும்.
தமிழ்நாட்டில் இந்துக்களின் மிகப்பெரிய எதிரி கிறிஸ்தவ சர்ச்களும் மதமாற்ற கும்பல்களும் தான். அரசியல், ஊடகம், சினிமா, சமூகம் என்று எல்லாத் துறைகளிலும் இந்துத்துவத்தையும் மோதி அரசையும் வெறித்தனமாக எதிர்ப்பதில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் இந்த சக்திகள். இவர்களை பாஜக கண்மூடித்தனமாக கட்சியில் சேர்ப்பது ஆபத்தானது, அபாயகரமானது. நான் மேலே குறிப்பிட்ட தேசபக்த கிறிஸ்தவ நண்பர்களும் இந்தக் கருத்தையே தெரிவிக்கின்றனர்.
கட்சியில் சேர்ந்த வேகத்திலேயே ‘நெருக்கடி’யால் விலகியும் விட்டேன் என்று ஒரு பாதிரியார் (?) வீடியோ பதிவிட்டிருக்கிறார். எனவே எத்தகைய பின்னனியில் இவர்கள் பாஜக.,வை நாடியிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
- ஜடாயு