விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி 34)

Published:

manakkulavinayakar

விளக்கம்: முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

நிறைவு செய்வதற்கு முன்

      பாரதி தம் தம்பி விசுவநாத ஐயருக்கு 03-08-1918 இல் எழுதிய கடிதத்தில் விநாயகர் ஸ்தோத்திரம் என்ற தம் நூலைப்பற்றிக் குறிப்பிடுகின்றார். இந்த விநாயகர் ஸ்தோத்திரம் தான், விநாயகர் நான்மணி மாலை. 1918க்கு முன் பாரதி புதுவையில் வாழ்ந்த காலத்தில் புதுவை மணக்குள விநாயகரை முன்னிறுத்திப் பாடிய இந்த நூல் அச்சில் 1929இல் பாரதி மறைவுக்குப் பின் வெளிவந்தது.

பாரதி பிரசுராலயத்தார் 1929 இல் இந்நூலைப் பதிப்பிக்கும் போது பின்வருமாறு தம் பதிப்புரையில் குறிப்பிட்டுள்ளார்கள். “இந்நூல் பாரதியாரின் கையெழுத்துப் பிரதி அப+ர்ணமாயிருந்த இடங்களில் ஸ்ரீதேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் ஸ்ரீசுத்தாநந்த பாரதியார் அவர்கள் முதலியவர்களைக் கொண்டு பூர்த்தி செய்யப்பட்டது. கையெழுத்துப் பிரதியில் காணாதன நகவளைவு (பிராக்கெட்) களுக்குள் தரப்பட்டுள்ளன”.

      பாரதி வழக்கமான பக்தி இலக்கியமாக இந்நூலைப் படைக்கவில்லை. மாறாக, தம் தத்துவத் தேடலின் ஒரு முயற்சியாகத்தான் படைத்துள்ளார். இவ்வுலகில் கலியைக் கொன்று கிருதயுகத்தினைக் கொணர்ந்து எல்லோரும் இம் மண்ணிலேயே அமரத்தன்மை எய்தும் வகையைச் சாத்தியமாக்கும் பிரகடணமாகவே இந்நூலைச் சமைத்துள்ளார்.

ALSO READ:  அதிர்ச்சி... அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

      பாரதியின் கீதை முன்னுரை, விநாயகர் நான்மணி மாலை இரண்டையும் ஆராய்ந்தால் இரண்டில் முன்னது இலக்கணம் போலவும் பின்னது இலக்கியம் போலவும் படைக்கப்பட்டுள்ளது என நாம் உணரலாம். உடம்பினால் செய்யப்படும் தொழில் மாத்திரமே தொழிலன்று, மனத்தால் செய்யப்படும் தொழிலும் தொழிலேயாம். கவிதைகள், நாடகங்கள்,  சட்டங்கள் கதைகள், காவியங்கள் தொழில்கள் அல்லவா? என பாரதியார், பகவத் கீதையின் முன்னுரையில் குறிப்பிடுவார். இதனையே விநாயகர் நான்மணி மாலையில்,

நமக்குத் தொழில் கவிதை நாட்டிற் குழைத்தல்

இமைப்பொழுதும் சோராதிருத்தல்

சிந்தையே இம்மூன்றும் செய்

என்று குறிப்பிடுவார். எல்லாத் துயரங்களும், எல்லா அச்சங்களும் எல்லாக் கவலைகளும் நீங்கி நிற்கும் நிலையே முக்தி என்ற கருத்து பகவத் கீதையின் முன்னுரையில் பாரதியார் சொல்லுவதாகும். இதனை, விநாயகர் நான்மணி மாலையில்,

மறவாதிருப்பாய் மடமை நெஞ்சே

கவலைப் படுதலே கருநரகம்மா

கவலையற்றி ருத்தலே முக்தி

என்று கூறுகிறார். சாகாதிருத்தல், மண்மீது மாளாமல் மார்க்கண்டேயன் போல் வாழ்தல், இதுவே கீதையின் ரஸம். இதனை,

ALSO READ:  மதமாற்ற விவாதம் ... மீண்டும்!

துயரிலாது இங்கு

நிச்சலும் வாழ்ந்து நிலைபெற்று ஓங்கலாம்

அமரத் தன்மை எய்தவும்

இங்கு நாம் பெறலாம், இஃது உணர்வீரே!

என்ற வரிகளில் விநாயகர் நான்மணி மாலையில் கூறுவார்.

      மோட்சத்தை அடைய விரும்புவோனுக்கு முக்கியமான பகை  அவனுடைய சொந்த மனமே ஆகும். உள்ளப்பகையைக் களைந்துவிட்டால் புறப்பகை தானே நழுவிப்போய்விடும் என்பது பகவத் கீதையின் முன்னுரையில் பாரதியார் சொல்லும் கருத்து. விநாயகர் நான்மணி மாலையில்

மனமே! எனைநீ வாழ்வித்திடுவாய்!

வீணே உழலுதல் வேண்டா!

என்றும்,

மேவி மேவித் துயரில் வீழ்வாய்

எத்தனை கூறியும் விடுதலைக் கிசையாய்

பாவி நெஞ்சே! பார்மிசை நின்னை

இன்புறச் செய்வேன் எதற்குமினி அஞ்சேல்.

என்றும் இரு இடங்களில் இக்கருத்தைச் சொல்லுகிறார்.

இதன் தொடர்ச்சியை நாளை காணலாம்.

Related articles

Recent articles

spot_img