தெலுங்கில்: பிஎஸ் சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
“Quality consciousness is lacking among Indians Mediocracy Prevailed – தரம் குறித்த சிந்தனை இந்தியர்களுக்கு இல்லை”.
இந்த அசாத்திய பிரசாரத்தினால் நம் மானசிக நிலைமையில் ஏற்பட்ட மாற்றங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்…!
இந்தியாவில் எந்த பொருளிலும் தரம் இருக்காது என்பது வந்தேறிகளின் சுயநலத்தோடு கூடிய துஷ்பிரசாரங்களில் ஒன்று. அதனால் பாரத தேசத்தில் தயாரிக்கப்பட்டவை தரம் குறைந்தவை என்றும் இம்போர்டட் பொருட்கள் நல்லவை என்றும் நம்பும் மனநிலை நம் நரம்புகளில் ஜீரணமாகிவிட்டது.
நம் தேசத்தில் தரம் இல்லையா? சுத்தமான குடிநீர் கூட தயார்செய்ய இயலாத நிலையில் நம் தேச அறிவியல் அறிவு உள்ளதா? வெளிநாட்டு பிராண்ட் தண்ணீரையே வாங்கவேண்டிய நிலை ஏன் வந்தது?
வெளிநாட்டு பல்கலைகழகங்களில் படிப்பதற்கு நம் இளைஞர்கள் ஏன் அலைகிறார்கள்? வெளிநாட்டு மருந்துகளே நல்ல தரம் வாய்ந்தவை என்ற பிரசாரத்தில் எத்தனை உண்மை உள்ளது?
‘பிரிட்டிஷ் இந்தியா’வின் காலத்தில் பாரத தேசம் தயார் செய்த தரமான நூல் துணிகளுக்கு இருந்த கிராக்கியைப் பார்த்து பிரிடிஷார் வியந்து போயினர். பாரதத் துணிகளின் ஏற்றுமதி மீது தடை கூட விதித்தார்கள். நம் தரத்தை குறைத்து மதிப்பிட்டுப் பேசினார்கள். பாரதிய பொருட்கள் தரம் குறைந்தவை என்று அனைவரின் மூளைக்குள்ளும் சந்தேக விதைகளை விதைத்தார்கள்.
நம் தேசத்தில் மட்டுமின்றி பிற தேசங்களிலும் பொருட்காட்சி சாலைகளில் அடுக்கிவைக்கப்பட்ட துருப்பிடிக்காத எஃகு, இரும்பு மற்றும் தங்கப் பொருட்கள் பாரதியர்களின் கலைத்திறனுக்குச் சிறு உதாரணங்கள் இல்லையா?
பண்டைக்காலம் முதல் பாரததேசம் தரத்திற்கும் நாணயத்திற்கும் பெயர் பெற்றது. நம் வீடுகளில் இருக்கும் பழைய பித்தளைப் பாத்திரங்களை ஒரு முறை எடுத்துப் பார்த்தால் ஆச்சர்யம் ஏற்படாதா? பாத்திரங்கள் மட்டுமே அல்ல உத்திரிணி போன்ற சின்னச் சின்ன பொருட்களின் தயாரிப்பில் எத்தனை படைப்பாற்றல் காட்டியுள்ளார்கள் நம் கலைஞர்கள்! அந்நாளைய கம்புகள் எத்தனை காலமானாலும் வீணாகாமல் இருப்பது பாரதியர்களின் தரத்திற்கு சான்று இல்லையா?
சிமென்ட் கண்டுபிடிப்பதற்கு முற்காலத்தில் கட்டிய மிகப்பெரும் கோவில்கள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளானாலும் குலையாமல் நிற்பது நம் தேசத்து தொழிலாளர்களின் நாணயமான செயல் திறனுக்குச் சான்று இல்லையா?
பாரதிய சங்கீதம், பாரத நாட்டியக் கலை, அன்றைய திரைப்படங்கள்… எதை எடுத்துக் கொண்டாலும் சற்றும் குறையாத தரத்தோடு இருப்பவையே அல்லவா?
அன்றைய நம் தேசம் அடிமைநாடு என்று குறைத்து மதிப்பிட்டு வந்தேறி ஆட்சியாளர்கள் அநியாயம் செய்தார்கள். இல்லாவிட்டால் நோபல் பரிசு பெறத் தக்க நாணயமும் தரமும் கொண்ட பாரதிய கலை நிபுணர்கள் எத்தனை பேர் இல்லை?
ஹோமி பாபா, ஜகதீஷ் சந்திரபோஸ், ஸ்ரீனிவாச ராமானுஜம் போன்ற மேதைகளைப் பெற்ற பாரதபூமி பெரும்பேறு பெற்றது.
தரத்திற்குப் பெயர் பெற்றவை பாரத தேசத்தில் தயாரிக்கப்பட்ட கருவிகள். நிகழ்காலத்தில் நம் தொழிலதிபர்கள் பல நாடுகளில் தரமான விமான நிலையங்கள், பாலங்கள் போன்றவை நிர்மாணித்து நற்பெயர் வாங்கி வருகிறார்கள்.
வெளிநாடுகளில் நம்மவர்கள் தொடங்கிய உணவுக் கடைகள் தரம் வாய்ந்தவை என்று உலக மக்கள் அவற்றின் மீது மொய்க்கிறார்கள். நம் மூலிகைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன.
அதனால் நம் மனதிலிருந்து நாம் தரம் குறைந்தவர்கள் என்ற எண்ணத்தைத் துடைத்தெறிவோம். வெளிநாட்டுப் பொருட்கள் மேலுள்ள மோகத்தைத் துடைத்தெறிவது பொருளாதார சுதந்திரத்திற்கு முதல் படி!
source– ருஷிபீடம், ஏப்ரல், 2019