வீரத்தியாகி குதிராம் போஸ்

Published:

kuthiram bose - 2026

கட்டுரை: ரஞ்சீத்

டிசம்பா்-3 இந்த புனித ஆத்மாவின் 133 ஆம் ஆண்டு பிறந்தநாள்.

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது.

குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். நம் பாரத விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர்.

குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார் .

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது .யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவரும் சேர்ந்து அவர் வரும் வண்டியில் குண்டு வீசிவிட்டு தப்பி விட்டனர் ; அதில் இருந்தது அவரின் மனைவி மற்றும் மகள் அவரில்லை;இதை அறிந்து ஏகத்துக்கும் வருந்தினார் குதிராம் போஸ் .

அப்பாவிகளை எப்பொழுதும் கொல்வதில்லை எனும் கொள்கைகொண்டவர்கள் அவர்கள் .பிரபுல்லா அங்கேயே சுட்டுக்கொண்டு இறந்து விட வழக்கு விசாரணைக்கு பிறகு தூக்கு என ஆங்கிலத்தில் அறிவித்தார் நீதிபதி

,”ஏன் சிரிக்கிறாய்?
நான் சொன்னது புரிந்ததா ?
”என கேட்க ,
”நன்றாக புரிந்தது “என சொல்ல ,
இங்கு இருப்பவர்களுக்கு எதாவது சொல்ல வேண்டுமா என அவர் கேட்க ,”வேண்டுமானால் உங்களுக்கு எப்படி வெடிகுண்டு தயாரிப்பது என சொல்லித்தருகிறேன்”என அவன் சொன்ன பொழுது நம்புங்கள் வயது பதினெட்டு தான் !

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

தூக்குதண்டனை விதிக்கபட்டு கையில் பகவத் கீதையுடன், வாயில் மனதார “வந்தே மாதரம்” என முழங்க அவர் தூக்கிலிடபட்ட பொழுது பதினெட்டு வயது ஏழு மாதம் பதினொரு நாள் வயதான இளைஞன் அவர்…

அவர் தூக்கிலிடபட்ட பின் அவரின் அஸ்தியை பெண்கள் கொண்டு சென்று தங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்கும் பாலில் கலந்து கொடுத்தார்கள். தேசபக்தி தங்கள் பிள்ளைகளின் ரத்தத்தில் பாயவேண்டும் என்பதற்காக அப்படி செய்தார்களாம் ! குதிராம் இறக்கிற பொழுது அவரின் சித்தி கருவுற்று இருந்தார். இப்படி ஒரு கவிதை எழுதி வைத்துவிட்டுப்போனார் குதிராம்.

“ஒருமுறை விடைகொடு அம்மா!
என் அருமை அம்மா!
நான்
மீண்டும் பிறப்பேன்
சித்தியின் வயிற்றில்…
பிறந்தது நான்தான் என்பதையறிய
குழந்தையின் கழுத்தைப் பார்
அதில் சுருக்குக் கயிற்றின்
தடம் இருக்கும்”…

எவரோ பொட்டிக்கடையில் பொரிகடலை வாங்கி தந்தது மாதிரி கற்பிக்கப்படுவது போல, சுதந்திரம் ஒன்றும் சும்மா கிடைக்கவில்லை..!

Related articles

Recent articles

spot_img