30-03-2023 12:33 AM
More
    Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்சம்ஸ்க்ருத ந்யாயமும் விளக்கமும் (27): கதானுகதிக நியாய: !

    To Read in other Indian Languages…

    சம்ஸ்க்ருத ந்யாயமும் விளக்கமும் (27): கதானுகதிக நியாய: !

    பிச்சைக்காரன் கதையில் பிச்சைக்காரனுக்கு நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் குருட்டுத்தனமாக யோசிக்காமல் பின்பற்றுபவர்கள் எத்தனை நஷ்டமடைகிறார்கள்   தெரியுமா?

    சம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும் – பகுதி – 27
    தெலுங்கில்: பி.எஸ்  சர்மா
    தமிழில்: ராஜி ரகுநாதன்

    கதானுகதிக நியாய:
    – குருட்டுத்தனமாக பின்பற்றுவது

    யாரோ, எதற்கோ, எப்படியோ, ஏதோ ஆரம்பித்தால் மீதி உள்ளவர்கள் அதை அப்படியே  குருட்டுத்தனமாக பின்தொடர்வார்கள். ஆழமாக அதைப்பற்றி சிந்திக்க மாட்டார்கள்.

    கதானுகதிகோ லோகோ ந லோக: பாரமார்த்திக: |
    கங்கா சைகதலிங்கேன நஷ்டம் மே தாம்ர பாஜனம் ||

    பொருள்:

    உலகத்தில் ஒருவர் எவ்வாறு சென்றால் மீதி உள்ளவர்களும் அவ்வாறு செல்வார்களே தவிர சுயமாக உண்மையைத் தெரிந்து கொள்ள முயற்சி செய்வதில்லை.

    இந்த சுலோகத்தில் ஆழமான உட்பொருள் உள்ளது. அதனை விளக்கும் கதை ஒன்று உள்ளது. ஒரு ஊரில் ஒரு பிச்சைக்காரன் இருந்தான். பிச்சை மூலம் அவன் சேர்த்து வைத்த பணத்தை ஒரு செப்புச் செம்பில் சேர்த்து வைத்தான். ஒரு நாள் அவன் காசிக்குச் சென்று கங்கையில் நீராட வேண்டும் என்று நினைத்தான். கஷ்டப்பட்டு காசிக்குச் சென்றான். கங்கா ஸ்நானம் செய்வதற்கு முன் காசு சேர்த்து வைத்த செப்புப் பாத்திரத்தை எங்காவது பத்திரமாக வைக்க வேண்டும் என்று நினைத்தான். யாரிடம் கொடுத்தாலும் எடுத்துக் கொண்டு ஓடி விடுவார்கள் என்பதால் அவனுக்கு ஒரு உபாயம் தோன்றியது. நதிக்கரை மணலில் அந்த செப்புச் செம்பை ஒரு குழி தோண்டி புதைத்து, அடையாளமாக ஒரு சிவலிங்க வடிவத்தில் மணலைப் பிடித்து அதன் மீது வைத்து, ஒரு பூவையும் அதற்கு அலங்காரமாக வைத்து விட்டு கங்கையில் இறங்கிக் குளித்தான். குளிக்கப் போகும் முன்பு மணலால் சிவலிங்கம் செய்து பூ வைத்து அதன் பிறகு குளிக்க வேண்டும் போல் இருக்கிறது என்று அதன் பிறகு வந்த யாத்திரிகர்கள் நினைத்தார்கள். அந்த பிச்சைக்காரன் ஸ்நானம் செய்துவிட்டு வந்து பார்த்தால் கங்கை கரையில் நூற்றுக்கணக்கான சிவலிங்கங்கள் உருவாகி இருந்தன. பிச்சைக்காரன் தன்னுடைய  செப்புப் பாத்திரத்தை எங்கே வைத்தேன் என்று தேடினான். செம்பும் போய்விட்டது, பணமும் போய்விட்டது. குருட்டுத்தனமாக பின்பற்றினால் இவ்வாறு ஆகும் என்று கூறும் ஸ்லோகம் இது.

    இன்னொரு கதை. ஒரு குடும்பத்தார் ஒரு பூனை வளர்த்தனர். வீட்டுக்காரர் பூஜை செய்யும் சமயத்தில் பூனை வந்து தொந்தரவு செய்யும் என்பதால் பூனையை கயிற்றால் கட்டிவிட்டு பூஜை செய்வது வழக்கம். சிறிது நாளில் வீட்டுக்காரர் இறந்து போனார். பூனையும் இறந்து போனது. ஆனால் அந்த வம்சத்தினர், வீட்டில் எந்த பூஜை நடந்தாலும் எங்கிருந்தாவது ஒரு பூனையை எடுத்து வந்து கட்டி வைத்துவிட்டு பூஜை செய்யத் தொடங்கினார்கள். பூனையைப் பிடித்து வந்து கட்டி வைக்காவிட்டால் பூஜை முழுமை அடையாது என்று எண்ணத் தொடங்கியது அந்த குடும்பம்.

    உண்மையில் நடந்த இன்னொரு கதை. எனக்குத் தெரிந்து ஒரு புகழ் பெற்ற காரியாலயத்  தோட்டத்தில் சில பெஞ்சுகள் இருந்தன. அவற்றுக்குப் புதிதாக பெயின்ட் அடிக்கப்பட்டிருந்தது. அவற்றின் மீது யாரும் அமர்ந்து விடாதபடி இருபுறமும் இரு செக்யூரிட்டிகள் காவலுக்கு இருக்க வேண்டும் என்று தொடர்புடைய அதிகாரி உத்தரவிட்டார். அதன் பிறகு விடுமுறைக்கு கிராமத்திற்குச் சென்று விட்டு ஒரு வாரம் கழித்து திரும்பி வந்தார். அவருடைய உத்தரவு அமலாக்கப்பட்டதை பார்த்து மிகுந்த வியப்படைந்தார்.

    “பெயிண்ட் அடிக்கப்பட்ட பெஞ்சுகள் இன்னுமா காயவில்லை?” என்று கேட்டார். விஷயம் புரிந்ததல்லவா? பெயிண்ட் அடித்த அந்த பெஞ்சுகளின் மீது யாரும் அமராதபடி வைத்த காவல் அது. ஏனோ தெரியவில்லை அவர்கள் அவ்வாறு ஒரு வாரமாக பெயின்ட் அடிப்பதைத் தொடர்ந்து செய்தார்கள்.

    குருட்டுத்தனமாக பின்பற்றும் அநேக பழக்கங்கள் இந்த ‘கதானுகதிக’ நியாயத்திற்கு உதாரணமாக நம் கண் முன்னால் நிறைய தென்படும்.

    பல நூறு ஆண்டுகள் நாம் அடிமைப்பட்டு வாழ்ந்ததால் வெளிநாட்டினரின் ஆட்சியை   குருட்டுத்தனமாகப் பின்பற்றும் பழக்கம் அதி வேகமாக கடைபிடிக்கப்படுகிறது. மேல் நாட்டவர் யாரோ எந்த காரணத்தாலோ தொடங்கி வைத்த “குசேலரின் ஆடை” அதாவது கிழிந்து போன உடையை இங்கும் பயன்படுத்துகிறார்கள். கால்சட்டைகளைக் கிழித்து, பிய்ந்து தொங்கும் ஆடைகளை அணிந்து கொள்ளும் தரித்திரம் பிடித்த உடையலங்காரம் இங்கு இன்னமும் தொடர்கிறது .

    இந்த ‘கதானுகதிக’ நியாயத்திற்கு நேரடியான உதாரணம் இதோ… இன்று பாரதிய கலாச்சாரம் என்ற செப்பு பெட்டகத்தை நாம் இழந்து வருகிறோம். உலகத்திற்கே நாகரிகம் கற்றுக்கொடுத்த பாரதியர்களுக்கு தனக்கென்று ஒரு தனித்தன்மை இருந்தது. ஆனால்  ஆங்கிலேய அரசாட்சியின் தாக்கத்தால் குருட்டுத்தனமாக பின்பற்றுவது தொடங்கப்பட்டு  சுதந்திர பாரதத்தில் எல்லாம் தலைகீழாக மாறி வருகிறது. ஒரேடியாகவும், ஒன்றுமில்லாமலும் உடை அணியும் முறை பின்பற்றப்படுகிறது.  குளிர் நாடுகளில் அணியும் கோட், சூட், டை போன்றவை நம்முடைய வெப்ப நிலைக்குச் சரி வராது என்றாலும் கூட அனைத்து காலங்களிலும் அதையே உடுத்துகிறோம். திருமண ரிசப்ஷன், கல்லூரிகளில் பட்டமளிப்பு விழா போன்றவற்றில் அணியும் கவுன், கோட், ஜட்ஜ், லாயர் போன்றோர் அணியும் உடை ஆங்கிலேயர்கள் மற்றும் சர்ச்சுகளில் இருந்து நாம் கடன் வாங்கிக் கொண்டவை. இவை அனைத்தும் ‘கதானுகதிக’ நியாயத்திற்கு உதாரணங்கள். நம் பாரம்பரியத்திற்கு ஒவ்வாத இந்த பழக்கங்கள் வெளிநாட்டவர்களிடம் இருந்து நாம் காப்பியடிப்பவை.

    என் நண்பர் தன் பேரனுக்கு நான்காவது பிறந்தநாள் கொண்டாட்டத்தை சம்பிரதாயபடி நடத்தினார். கோவிலில் இறைவனை தரிசிப்பது, புதிய உடை உடுத்துவது, தீபம் ஏற்றுவது, குழந்தைக்கு திருஷ்டி எடுப்பது போன்றவற்றை நடத்தினார். அனைத்தும் நிறைவுற்ற பின் அந்த பேரக் குழந்தை தன் நண்பர்களோடு சேர்ந்து, “தாத்தா! ஹாப்பி பர்த்டே கொண்டாட்டம் எப்போது தொடங்கும்?” என்று கேட்டனர். கேக் கட் செய்வது தீபங்களை அணைப்பது என்பவை செய்யாமல் ஹாப்பி பர்த்டே பூர்த்தி ஆகாது என்ற எண்ணம் அந்தச் சின்ன வயதிலிருந்தே மனதில் பதிந்து போனதை நம் சமுதாயத்தில் பார்க்க முடிகிறது.

    ஆங்கிலேயர்கள் ஆண்ட பிரிட்டிஷ் இந்தியாவில் பட்ஜெட்டை பிரிட்டிஷ்காரர்களுக்கு அனுப்பும் சமயம் நமக்கு மாலை நேரம் ஐந்து மணி முப்பது நிமிடங்கள். அதாவது இங்கிலாந்தில் மத்தியானம் பன்னிரண்டு மணி சமயத்தில் அறிவிப்பார்கள். மாலை நேரத்தில் பட்ஜெட் அறிவிக்க  வேண்டுமென்று நினைத்த நம் ஆட்சியாளர்களும் அதே பழக்கப்படி அண்மைக்காலம் வரை சுதந்திர பாரதத்திலும் கடைப்பிடித்தார்கள்.

    பிரிட்டிஷ் ஆட்சியர் முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு அனுகூலமாக எழுதிய வரலாற்றை அடிமை தேசத்தில் படிப்பது இயல்புதான். ஆனால் சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆனால் கூட அதே தப்பான பாடங்களையே பள்ளிகளில் படிக்க வைப்பதும் இந்த ‘கதானுகதிக’ நியாயத்திற்கு உதாரணமாகிறது.

    நம் விஞ்ஞான அறிஞரான சர் ஜெகதீஷ் சந்திர போஸ் செய்த பரிசோதனைகளை பிரிட்டிஷ் வந்தேறிகள், மார்க்கோனியின் கணக்கில் போட்டு விட்டார்கள். ஆனால் சுதந்திரம் வந்த பின்னரும் அதே பாடங்களை வழி வழியாக நாம் கற்றுக் கொடுப்பது குருட்டுத்தனமாகப் பின்பற்றும் உதாரணத்திற்கு ஏற்ப உள்ளது.

    சுதந்திரமாக, ஆழமாக, உயர்வாக எண்ண வேண்டும் என்று கூறும் இந்த நியாயம் குருட்டுத்தனமாக பின்பற்றும் வழக்கத்தை நிந்திக்கிறது.

    ஹைதராபாதில் நிஜாம் ஆட்சி காலத்தில் தெலுங்கு மொழி வழிக் கல்விக்குத் தடை இருந்தது. உருது மொழியிலேயே நம் பூர்வீகர்கள் கல்வியை கற்க வேண்டிய நிர்பந்தம் இருந்தது. தெலுங்கு மொழியில் உருது மொழிச் சொற்கள் கலந்து போனது. பல நகரங்களின் பெயர்கள் கூட உருது மொழிக்கு மாற்றப்பட்டன.

    சுதந்திரத்திற்கு பிறகு கூட  பேச்சு மொழியில் accent, நகரங்களின் பெயர்கள் இன்னமும் அவ்வாறே தொடர்கின்றன. இதுவும் ‘கதானுகதிக’ நியாயத்திற்கு உதாரணம்.

    பாலிவுட்டில் உள்ள ஹிந்து எதிர்ப்பு சக்திகளும், மதவெறியர்களும் அவர்களின் ஏஜென்ட்களும், தாம் எடுக்கும் சினிமாக்களில் வில்லனுக்கு கும்குமப் பொட்டு வைத்துக்   காட்டத் தொடங்கினார்கள்.

    மேலே சொன்ன பூனைக் கதையை போலவே மீதியுள்ள இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் கூட வில்லன் என்றால் பொட்டு இருக்க வேண்டும் என்றும் சாதுவான குணமுள்ளவர்களுக்கு சிலுவையோ, தலையில் தொப்பியோ இருக்க வேண்டும் என்றும் தீர்மானமாக இருக்கிறார்கள். இவ்வாறு சிந்தனை செய்யாமல்  குருட்டுத்தனமாக பின்பற்றுவது அநியாயம் என்று கூறுகிறது இந்த நியாயம்.

    “மக்கீ கி மக்கி” – ஈ அடிச்சான் காப்பி – என்று கூறுவது இதைத்தான். ஒரு புத்தகத்தைப் பார்த்து பிரதி எடுக்கும் வேலை ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த புத்தகத்தின் ஒரு பக்கத்தில் எப்போது ஒரு ஈ இறந்து அதில் ஒட்டியிருந்தது. காப்பி எடுப்பவரும் ஒரு   ஈயை வேட்டையாடிக் கொன்று அந்த பக்கத்தில் ஒட்ட வைத்தார். மக்கி என்றால் ஈ என்று பொருள். ஏன், எதற்கு என்ற யோசிக்காதவர்களின் செயல் அப்படித்தான் இருக்கும். சும்மா குருட்டுத்தனமாகப் பின்பற்றுவது.

    திருமணங்களில் அளவுக்கு அதிகமாக ஆடம்பரமாக செலவு செய்வதை யார்தான் தொடங்கினார்களோ தெரியவில்லை. சக்தியற்றவர்கள் கூட அதனைப் பின்பற்றி கடனாளியாவது  “நஷ்டம் மே தாம்ர பாஜனம்” என்ற மேலே சொன்ன சுலோகத்திற்கு பொருந்தமாக இருக்கிறது.

    பிச்சைக்காரன் கதையில் பிச்சைக்காரனுக்கு நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் குருட்டுத்தனமாக யோசிக்காமல் பின்பற்றுபவர்கள் எத்தனை நஷ்டமடைகிறார்கள்   தெரியுமா? கலாச்சாரம், ஒழுக்கம், பண்பாடு, நேரம், செல்வம் அனைத்தையுமே இழக்கிறார்கள்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    eighteen + 12 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,033FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,634FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவு..

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமாரின்...

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    Latest News : Read Now...