
காங்கிரஸ் கூட்டணியில் இணைவதற்கு மக்கள் நீதி மய்யம் பேச்சு வார்த்தையைத் தொடங்கியுள்ளது. ஜனவரி முதல் வாரத்தில் கூட்டணி இறுதி செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்களவைத் தேர்தலில் மோடி என்ற பலம் பொருந்திய மனிதருக்கு எதிராக, கிறிஸ்துவ இயக்கங்கள், சர்ச்சுகள், இஸ்லாமிய அமைப்புகள் ஆகியவற்றின் உந்துதலுடன் தேசிய அளவில் வலுவான அணியை உருவாக்கும் முயற்சியில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.
தமிழகத்தில் திமுக தலைமையிலான அணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இஸ்லாமிய கட்சிகள் ஆகியவை உள்ளன. மதிமுக., விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவை தோழமைக் கட்சிகளாக உள்ளன. இவை தமிழகத்தில் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கியுள்ள கமல்ஹாசன், கூட்டணி அமைத்து போட்டியிடுவாரா அல்லது தனித்துப் போட்டியிடுவாரா என்று பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இதனிடையே திமுக.,வுடன் கூட்டணியில் மநீம சேரும் என்று தொலைக்காட்சி ஒன்றில் செய்தியாக வெளியிடப் பட்டது. இதற்கு கடும் கோபத்தை வெளிப்படுத்திய கமல்ஹாசன், கருணாநிதியின் சிலைத்திறப்பு நிகழ்ச்சியில் கூட கலந்து கொள்ளாமல் தவிர்த்து விட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கட்சியின் செயற்குழு கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் “ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும்” என்று அறிவித்தார்.
அதே நேரத்தில், பாஜகவுடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு “தமிழகத்தின் மரபணுவை மாற்ற நினைக்கும் கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம்” என்று தெரிவித்தார். எனவே, காங்கிரஸுடன் கமல்ஹாசன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கியவுடன் கமல் ஹாசன் தில்லிக்கு சென்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரை சந்தித்துப் பேசினார். ஆரம்பம் முதலே காங்கிரஸ் தலைவர்களுடன் நெருக்கத்தை காட்டி வருகிறார்.
இந்நிலையில், காங்கிரஸு டன் இணைந்து தேர்தலை சந்திக்க மக்கள் நீதி மய்யம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளது. இது தொடர் பாக, காங்கிரஸ் கட்சியுடன் மக்கள் நீதி மய்யம் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படும் பட்சத்தில் கூட்டணி உறுதி செய்யப்படும் என்றுகூறப் படுகிறது.
கமல்ஹாசன் ஓய்வு எடுப்பதற்காக நேற்று முன்தினம் நள்ளிரவு சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார். சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு ஜனவரி முதல் வாரத்தில் சென்னை திரும்புகிறார். அதன் பிறகு கூட்டணி உறுதி செய்யப்பட்டு, முழு வடிவம் பெறும் என்று தெரிகிறது.


