வரகு சாம்பார் சாதம்
தேவையானவை
வரகு அரிசி – 1 கப்
துவரம் பருப்பு – 30 கிராம்
தண்ணீர் – 3 கப்
சிறிய வெங்காயம் – 100 கிராம்
நல்லெண்ணெய் – 1 தேக்கரண்டி
காய்கறிகள் – ஏதாவது 4 அல்லது 5
தக்காளி – 3
கடுகு – 1/4 தேக்கரண்டி,
சீரகம் – 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 1 ஈர்க்கு,
பச்சை மிளகாய் – 1
பெருங்காயம் – 2 சிட்டிகைகள்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை,
உப்பு – சுவைக்கேற்ப
சாம்பார் மசாலா செய்ய:
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
கடுகு – ¼ தேக்கரண்டி, பட்டை – 1 துண்டு, கிராம்பு – 3
உளுந்து – 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 2
வெந்தயம் – ¼ தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி விதை – 1 தேக்கரண்டி
துருவிய தேங்காய் – 2 தேக்கரண்டி
கொத்தமல்லி தழை – சிறிதளவு
செய்முறை :
முதலில் வாணலியில் சாம்பார் சாதம் மசாலா பொடி தயாரிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக வறுத்துக் கொள்ளவும். ஆறிய பிறகு அவற்றை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து, அந்தப் பொடியை தனியே வைக்கவும். வரகரிசியையும், துவரம் பருப்பையும் தனித்தனியே 30 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும்.
கொத்தமல்லி தழை, காய்கறிகள், தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் கடுகு, சீரகம் போட்டு தாளித்த பின் சிறிய (சாம்பார்) வெங்காயம், முழு பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
அடுத்து தக்காளியுடன், மஞ்சள் பொடி, பெருங்காயம் மற்றும் சிறிது உப்பு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். இப்போது அனைத்து காய்கறிகள், வரகரிசி, துவரம் பருப்பு ஆகியவற்றை குக்கரில் சேர்த்து நீரை ஊற்றி வேக வைக்கவும். முதல் விசில் வந்த பிறகு, தீயை குறைத்து 8 நிமிடங்கள் காத்திருந்து, பின் அடுப்பை அணைக்கவும்.
குக்கர் ஆவி போன பிறகு, மூடியைத் திறந்து சாம்பார் சாத மசாலா பொடியை சேர்த்துக் கலக்கவும். குக்கரை மீண்டும் அடுப்பில் வைத்து 2 நிமிடங்கள் வேக விடவும். பின் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். சுவையான வரகு சாம்பார் சாதம் தயார்.