பச்சைப் பட்டாணி போண்டா
தேவையானவை:
வேகவைத்த பச்சைப் பட்டாணி – 200 கிராம்,
கேரட் துருவல் – ஒரு டீஸ்பூன்,
தக்காளி, பச்சை மிளகாய் – தலா – 2 (பொடியாக நறுக்கவும்),
நறுக்கிய கொத்தமல்லித்தழை, புதினா – சிறிதளவு,
எண்ணெய் – 300 கிராம்,
உப்பு – தேவையான அளவு.
மேல் மாவுக்கு:
கடலை மாவு – 150 கிராம்,
அரிசி மாவு – 25 கிராம்,
மிளகாய்த்தூள், உப்பு – சிறிதளவு.
செய்முறை:
வேகவைத்த பச்சைப் பட்டாணியுடன் உப்பு சேர்த்து நைஸாக அரைத்து, அதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், தக்காளி, நறுக்கிய கொத்தமல்லித்தழை, புதினா, கேரட் துருவல் சேர்த்துப் பிசையவும். இதை உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
மேல்மாவுக்கு கொடுத்துள்ளவற்றுடன் தேவையான நீர் சேர்த்து தோசை மாவைவிட சற்றே தளர்வாக கரைக்கவும். செய்து வைத்திருக்கும் உருண்டைகளை மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
குறிப்பு: பச்சைப் பட்டாணி இல்லாத சமயத்தில் உலர்ந்த பட்டாணியை ஊறவைத்து, வேகவிட்டு அரைத்து பயன்படுத்தியும் இந்த போண்டாவை செய்யலாம்.