ஜம்மு-காஷ்மீர் நிலைமை தொடர்பான ஜம்மு-காஷ்மீர் மக்கள் இயக்கத் தலைவர் ஷீலா ரஷீத்தின் குற்றச்சாட்டுகளை இந்திய ராணுவம் ஞாயிற்றுக்கிழமை நிராகரித்தது. அத்துடன், அவை “ஆதாரமற்றவை” என்றும் உறுதியாகக் கூறியுள்ளது.
“ஷீலா ரஷீத் முன்வைத்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை; நிராகரிக்கப்பட வேண்டியவை. சந்தேகத்திற்கு இடமில்லாமல் மக்களைத் தூண்டுவதற்காக இத்தகைய சரிபார்க்கப்படாத மற்றும் போலியான செய்திகள், விரோதத்தைத் தூண்டும் கருத்துகள், இத்தகைய அமைப்புகளால் பரப்பப்படுகின்றன” என்று ராணுவம் உறுதிபடக் கூறியது.
ஞாயிற்றுக் கிழமை நேற்று, ஷீலா ரஷீத், தனது தொடர்ச்சியான ட்வீட்டுகளில் “சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை குறித்து ஜம்மு-காஷ்மீர் காவல்துறைக்கு அதிகாரம் இல்லை என்று மக்கள் சொல்கிறார்கள். அவர்கள் சக்தி அற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். எல்லாம் துணை ராணுவப் படையினரின் கைகளில் உள்ளது. ஒரு சிஆர்பிஎஃப் வீரரின் புகாரின் பேரில் ஒரு எஸ்எச்ஓ. இடம் மாற்றப் பட்டுள்ளார். எஸ்.எச்.ஓ.,க்கள் தடியடிகளை ஏந்தியுள்ளனர். சர்வீஸ் ரிவால்வர்களை அவர்களிடம் காண இயலாது. ” என்று ஒரு பதில் குறிப்பிட்டிருந்தார்.
மற்றொரு பதிவில், “ஆயுதப்படைகள் இரவில் வீடுகளுக்குள் நுழைகின்றன! சிறுவர்களை அழைத்துச் செல்கின்றன, வீடுகளை கொள்ளையடிக்கின்றன, வேண்டுமென்றே தரையில் ரேஷன் பொருள்களைக் கொட்டுகின்றன, அரிசியுடன் எண்ணெயைக் கலக்கின்றன.” என்று குறிப்பிட்டிருந்தார்.
ஷோபியனில், நான்கு பேர் “இராணுவ முகாமுக்கு அழைக்கப்பட்டு” விசாரிக்கப்பட்டனர் (சித்திரவதை செய்யப்பட்டனர்) என்றும் ரஷீத் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
“ஒரு மைக் அவர்களுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்தது, இதன் மூலம் அவர்கள் முழுதும் மைக்கில் அலறுவதைக் கேட்கவும், மக்களை பயப்பட வைக்கவும் முடியும். இது முழுப் பகுதியிலும் அச்சத்தின் சூழலை உருவாக்கியது,” என்று பதிவிட்டார்.
இதனிடையே, காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களின் “முழு செயல்பாட்டை” மீட்டெடுப்போம். ஸ்ரீநகரில் 190 க்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகள் திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்படும் என்று ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
“ஸ்ரீநகர் மாவட்டத்தில் மட்டும் 190 க்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகளை மீண்டும் திறக்கும் திட்டம் எங்களிடம் உள்ளது” என்று திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு முதன்மைச் செயலர் ரோஹித் கன்சால் செய்தியாளரிடம் பேசிய போது கூறியுள்ளார்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையே, ராணுவம் ஷீலா ரஷீத்தின் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்தது. வேண்டுமென்றே பொய்ச் செய்திகளைப் பரப்பி, மக்களை தூண்டிவிடுகிறார்கள் என்று கூறியது.
இதை அடுத்து, ஷீலா ரஷீத் மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்யப் பட்டது.
இந்திய ராணுவத்துக்கும் அரசாங்கத்துக்கும் எதிராக போலி செய்திகளை பரப்பிய குற்றச்சாட்டில் கைது செய்யக் கோரி மாணவர் தலைவர் ஷீலா ரஷீத் மீது உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அலக் அலோக் ஸ்ரீவாஸ்தவா
திங்கள்கிழமை கிரிமினல் புகார் அளித்தார்.
ஜம்மு-காஷ்மீர் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் வன்முறையைத் தூண்டும் நோக்கத்துடன் ரஷீத் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் போலி செய்திகளை பரப்புகிறார் என்று புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
அவரது ட்வீட் பல ட்விட்டர் பயனர்களால் சர்வதேச தளங்களில் பகிரப்பட்டு வருவதால், இந்தியாவின் நற்பெயருக்கு ஈடுசெய்ய முடியாத களங்கம் ஏற்பட்டுள்ளது. இது, ஐபிசி பிரிவு 124-ஏ இன் கீழ் தேசத் துரோக குற்றமாகும், இது அரசாங்கத்தின் மீது அதிருப்தியைத் தூண்டும் வகையில் அவர் புகார் கூறியுள்ளார்.
இதை அடுத்து அவர் மீது “ஐபிசி மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2002 இன் 153, 153-ஏ, 504, 505 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிய பட்டுள்ளது. இதில் மேலும், ‘ வேறு வேறு வகுப்புகளுக்கு இடையே பகைமையை வளர்ப்பதற்கான குற்றங்களை ரஷீத் செய்துள்ளார்’ என்று குறிப்பிடப் பட்டுள்ளது.