காஷ்மீரில் இருந்து கொண்டு செயல்பட்டு வரும் பிரிவினைவாத தலைவர் சையத் அலி ஷா கிலானிக்கு சலுகை காட்டிய இரண்டு பிஎஸ்என்எல் அதிகாரிகளை ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் பணி இடைநீக்கம் செய்துள்ளது. முன்னதாக சையது அலிஷா கிலானிக்கு காஷ்மீரில் கட் செய்யப் பட்டிருந்த நேரத்தில் நான்கு நாட்களுக்கு இணைய இணைப்பு வழங்கப் பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
காஷ்மீர் முழு பள்ளத்தாக்கும் கட்டுப் படுத்தப் பட்டு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தகவல்தொடர்பு இணைப்புகளும் ஒரு வாரத்திற்கும் மேலாக துண்டிக்கப்பட்டபோது, ஹுரியத் தலைவர் கிலானி தனது கணக்கிலிருந்து ட்வீட் செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து அளித்த 370 வது பிரிவை ரத்து செய்வதற்கான ஆக.5 ஆம் தேதி மத்திய அரசின் அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்னதாக, ஆக. 4ம் தேதியே காஷ்மீர் முழுவதும் லேண்ட்லைன் உட்பட அனைத்து தகவல்தொடர்பு இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன.
முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் முன்னாள் முதல்வர்கள், ஒமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி மற்றும் பாரூக் அப்துல்லா ஆகியோர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு நூற்றுக்கணக்கானவர்களுடன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
இருப்பினும், கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், பிரிவினைவாத தலைவரான சையத் அலி ஷா கிலானி ஆகஸ்ட் 8ம் தேதி காலை வரை லேண்ட்லைன் மற்றும் பிராட்பேண்ட் வசதியுடன் இருந்து வந்தார்.
கிலானி தனது தனிப்பட்ட கணக்கிலிருந்து ட்வீட் செய்யும் வரையில், காஷ்மீரில் அவர் இணைய இணைப்பைக் கொண்டிருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை!
இதன் பின்னர், சில குறிப்பிட்ட டிவிட்டர் கணக்குகள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் வெறுப்பை பரப்புவதாகக் கூறி, கிலானி உட்பட 8 பேரின் ட்விட்டர் கணக்குகளை முடக்கி வைக்குமாறு கோரி, மத்திய அரசும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையும் டிவிட்டர் நிறுவனத்துக்கு கடிதம் எழுதியது.
இணைய இணைப்பு வேறு எவரிடமும் இல்லாதபோது கிலானி மட்டும் இணையம் மற்றும் லேண்ட்லைன் கனெக்சனை எவ்வாறு பெற்றிருந்தார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக பி.எஸ்.என்.எல் உயர் அதிகாரிகள் இருவர் ஓட்டைகளைப் பயன்படுத்தி கிலானிக்கு கையாளாக வேலை பார்த்தது தெரியவந்தது. இதை அடுத்து அவர்கள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளனர்.