கேரளாவைச் சேர்ந்த முன்னாள் பிஷப் ஃபிராங்கோ, கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை சீரோ மலபார் சபையில் பணியாற்றி வந்தார். அந்தக் காலகட்டத்தில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகக் கடந்த வருடம் கன்னியாஸ்திரி ஒருவர் ஃபிராங்கோ மீது புகார் அளித்தார். இந்த விவகாரம் கேரள மாநிலம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது.இதையடுத்து, `ஃபிராங்கோவைக் கைது செய்ய வேண்டும்’ எனக் கூறி கொச்சியில் கன்னியாஸ்திரிகள் பலர் இணைந்து போராட்டம் நடத்தினர். பின்னர் ஃபிராங்கோ கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இவர் மீதான வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், பிஷப்புக்கு எதிராகச் சாட்சி சொன்ன பாதிரியார் குரியகோஸ் கட்டுத்தரா என்பவர் கடந்த ஆண்டு அக்டோபரில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
தொடர்ந்து, பிஷப்புக்கு எதிராகப் போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிகளில் ஒருவரான சிஸ்டர் அனுபமாவை இடமாற்றம் செய்து சபை உத்தரவு பிறப்பித்தது. அதே போராட்டத்தில் கலந்துகொண்ட கன்னியாஸ்திரி லூஸி களப்புரா என்பவர் கடந்த மே மாதம் சபையிலிருந்து நீக்கப்பட்டார். பாலியல் வழக்கில் சிக்கிய பிஷப் ஃபிராங்கோவுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிகளைக் குறிவைத்துப் பழிவாங்கலாக இந்த நடவடிக்கைகள் அமைவதாகப் புகார் எழுந்துள்ளது.இந்நிலையில் தங்கியிருந்த கான்வென்டிலேயே சிறை வைக்கப்பட்டுள்ளார் லூசி. இதுகுறித்து லூசி கூறியது, ` நான் இரண்டு நாள் பயணமாக வெளியூர் சென்றுவிட்டு நேற்றுமுன் தினம் நள்ளிரவு தான் கான்வென்ட்டுக்கு வந்தேன். பின்னர் நேற்று காலை 6:30 மணிக்குக் கதவைத் திறக்க முயற்சி செய்தபோது அது வெளிப்புறமாகப் பூட்டப்பட்டிருந்தது. அப்போதுதான் நான் சிறை வைக்கப்பட்டிருந்ததை உணர்ந்தேன்.இதனால் அதிர்ச்சியடைந்து, உதவிக்காக அருகிலிருந்த பலரையும் அழைத்தேன். ஆனால், யாரும் உதவிக்கு வரவில்லை. பின்னர் காவலர்களுக்குப் போன் செய்து தகவல் தெரிவித்தேன். அவர்கள் வந்து கதவை உடைத்து என்னை மீட்டனர். கான்வென்ட் அதிகாரிகள் என் சுதந்தரத்தைப் பறித்து, பிரார்த்தனை செய்வதற்குக்கூட அனுமதி மறுத்துவிட்டனர்” எனக் கூறியுள்ளார்.இதே விவகாரம் தொடர்பாக முன்பொருமுறை ஒரு செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த லூசி, “ எனக்கு மிகவும் பயமாக உள்ளது, அவர்கள் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்று வருகிறார்கள். என் முழு சந்தோஷத்தையும் என்னிடமிருந்து பறிக்க நினைக்கிறார்கள். என்னுடன் கான்வென்ட்டில் உள்ள மற்ற கன்னியாஸ்திரிகள் என்னைப் பார்த்தாலே ஏளனமாகச் சிரிக்கிறார்கள். என்னைத் தனிமைப்படுத்திவிட்டனர். என்னுடன் சேர்ந்து சாப்பிடக்கூட அவர்கள் வருவதில்லை. இவை அனைத்தையும் நான் ஏற்றுக்கொண்டேன். ஆனால், இது மிகவும் கடினமாக உள்ளது” எனக் கலங்கியிருக்கிறார்.
To Read this news article in other Bharathiya Languages
பூட்டிய அறையில் கன்னியாஸ்திரியின் கண்ணீர் ! பிரார்த்தனைக்கு கூட அனுமதியில்லை !
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari