ஏர் இந்தியா விமானத்திற்கு எரிபொருள் சப்ளை நிறுத்தப் பட்டதால், கொச்சி விமான நிலையத்தில் 4 மணி நேரம் பயணிகள் தவிப்புக்கு உள்ளாகினர்.
300 பயணிகளுடன் துபைக்கு புறப்பட அந்த விமானம் தயாராக இருந்த நிலையில், எரிபொருள் சப்ளை செய்யாததால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
இதனால் ஆவேசமடைந்த பயணிகள் பத்தனம்திட்டா எம்.பி.க்கு புகார் தெரிவித்தனர். இதை அடுத்து, விமானப் போக்குவரத்து அமைச்சர் மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சரிடம் அவர் தொடர்பு கொண்டு பேசினார்.
இரண்டு மத்திய அமைச்சர்களின் அறிவுறுத்தலின் பேரில், எரிபொருள் பிரச்னை தீர்க்கப்பட்டு 4 மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டு சென்றது.
கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனம், ரூ.4,500 கோடி நிலுவைத் தொகையை 7 மாதங்களாக வைத்துள்ளது. நிலுவைத் தொகை செலுத்தப் படாததால் சில விமான நிலையங்களில் எரிபொருள் வினியோகம் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.