![பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் பயங்கரவாதி பீஹாரில் கைது! 1 special task force](https://dhinasari.com/wp-content/uploads/2019/08/special-task-force.jpg)
பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்–இ–முகமது இயக்க பயங்கரவாதி தவுபிக் ரஸா பீகார் மாநிலம் கயா மாவட்டம் புனியட்கஞ்ச் பஜார் பகுதியில் பதுங்கி வாழ்ந்து வருவதாக மேற்கு வங்க மாநில சிறப்பு அதிரடிப் படைப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்நிலையில், இந்தத் தகவலை அடுத்து அம்மாநில சிறப்பு அதிரடிப்படை, பயங்கரவாத தடுப்புப் பிரிவு பீகாரில் பயங்கரவாதி இருந்து வந்த மான்புர் ப்ளாக் ஏரியாவில், புனியாத்கஞ்ச் பஜாரில் உள்ள வீட்டை அடையாளம் கண்டது. உள்ளூர் போலீசார் உதவியுடன் வீட்டை உளவு பார்த்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று இந்த வீட்டை முற்றுகையிட்ட பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதி தௌஃபிக் ரஸா என்ற இஜாஸ் அஹமதை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அந்த வீட்டில் இருந்து பிரச்னைக்குரிய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2007–ஆம் ஆண்டில் இருந்து ஜெய்ஷ்–இ–முகமது இயக்கத்தில் இந்த நபர் பணியாற்றி வந்துள்ளது தெரியவந்துள்ளது.
அந்த நபர் தனது அடையாளத்தை மறைத்துக்கொண்டு, கடந்த சில ஆண்டுகளாக அந்த வீட்டில் வசித்து வந்துள்ளான். இந்தியாவில் அவன் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் செயலில் ஈடுபட்டானா? வேறு எந்த விதமான பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டான் என்பது குறித்து பாதுகாப்புப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.