
ராகுல் காந்தி கேரளாவில் உள்ள வயநாட்டில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை கடந்த வருடத்தைப்போலவே இந்த வருடமும் கேரளாவில் வெளுத்து வாங்கி உள்ளது.
இந்த கனமழையால், கேரளாவில் பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன.
குறிப்பாக வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கடும் வெள்ளம், மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு அங்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட தனது சொந்த பாராளுமன்ற தொகுதியான வயநாட்டில் ராகுல் காந்தி, இன்று முதல் 3 நாட்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தனது சுற்றுப்பயணத்தின் போது, வெள்ள பாதிப்புக்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்வார் என்று தெரிகிறது.
இதனைதொடர்ந்து ராகுல் காந்தி, அரசியல் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள இருப்பதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூர் மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி கலந்துரையாட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக கடந்த 11 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை வயநாட்டில் சுற்றுப்பயணம் செய்த ராகுல் காந்தி, வெள்ள மீட்பு பணிகளை பார்வையிட்டார். வெள்ள பாதிப்புகளுக்கு உதவுமாறு பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தார்.



