மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண்ஜேட்லியின் வீட்டுக்குச் சென்ற பிரதமர் மோடி, இன்று அவரது குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறினார்.
உடல் நலக்குறைவால் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அருண்ஜேட்லி கடந்த சனிக்கிழமை காலமானார்.
அப்போது, பிரதமர் மோடி, பிரான்ஸ், யு ஏ இ., பஹ்ரைன் ஆகிய மூன்று நாடுகள் சுற்றுப் பயணத்தில் இருந்தார். ஜி7 நாடுகளின் உச்சி மாநாடும் இருந்த நிலையில், பிரதமர் மோடியால் அருண் ஜேட்லிக்கு இறுதி மரியாதை செலுத்த உடனே வர இயலவில்லை. இந்த நிலையில், டிவிட்டர் மூலம் அவர் இரங்கல் தெரிவித்திருந்தார்.
மேலும் அருண் ஜேட்லியின் குடும்பத்தினருடன் போனில் தொடர்பு கொண்டு பேசி, ஆறுதல் கூறினார். அப்போது அவரது குடும்பத்தால், மோடியை முக்கியப் பணியாக நாட்டின் நலன் கருதி பயணம் மேற்கொண்ட நிலையில், அதைத் தொடர்ந்து பார்க்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
இந்நிலையில் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இன்று காலை தில்லிக்கு திரும்பினார் பிரதமர் மோடி. தொடர்ந்து அவர் அருண் ஜேட்லியின் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
அங்கிருந்த ஜேட்லியின் உருவப் படத்திற்கும் மோடி அஞ்சலி செலுத்தினார். உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் இருந்தார்.